
ஜனாதிபதி நிதியம் டிஜிட்டல் மயமாகிறது – மருத்துவ விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு
ஜனாதிபதி நிதியத்தை பிரதேச செயலகங்கள் ஊடாக பரவலாக்கி டிஜிட்டல் மயப்படுத்தியதன் விளைவாக, ஓராண்டு காலப்பகுதிக்குள் மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை 59% ஆல் அதிகரித்துள்ளது. இதன்படி, 2025 ஆம் ஆண்டில் ஜனாதிபதி நிதியத்திற்கு 5,277 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. இது 2024 இல் 3,313 ஆகவும், 2023 இல் 3,456 ஆகவும் காணப்பட்டது.
ஜனாதிபதி நிதியம் பிரதேச செயலகங்களுக்குப் பரவலாக்கப்பட்டதன் விளைவாக, 2024 ஆம் ஆண்டை விட 2025 இல் 1,964 மேலதிக விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. இவர்களில் 70% க்கும் அதிகமானோருக்கு தற்போது மருத்துவ உதவிகள் வழங்கி முடிக்கப்பட்டுள்ளன.
2025 ஆம் ஆண்டில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுவதில் வடக்கு மாகாணத்தில் 253%, கிழக்கு மாகாணத்தில் 135%, மத்திய மாகாணத்தில் 116% மற்றும் ஊவா மாகாணத்தில் 108% வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. தீவு முழுவதிலுமுள்ள அனைத்து பிரதேச செயலகங்கள் ஊடாகவும் விண்ணப்பங்களை ஏற்கும் பணி 2025 பெப்ரவரி 07 முதல் ஆரம்பமானது.
இந்தத் திட்டம் வெற்றியடைந்துள்ளதால், ஜனாதிபதி நிதியத்தின் ஏனைய சேவைகளும் பரவலாக்கப்பட்டுள்ளன. இதன்படி, வறுமை ஒழிப்பு மானியங்கள், கல்வி புலமைப்பரிசில்கள், விசேட தேவையுடையோருக்கான உதவிகள், காட்டு யானைத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கான நிவாரணங்கள் மற்றும் இடர் கால உதவிகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் இப்போது இணைய வழியாக (Online) அல்லது எந்தவொரு பிரதேச செயலகம் ஊடாகவும் பெற்றுக்கொள்ள முடியும். இதன் மூலம் 47 வருடங்களாக கொழும்புக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் தற்போது நாட்டின் அனைத்து மக்களுக்கும் இலகுவாகக் கிடைக்கப்பெறுகின்றன.
