
டி20 உலகக்கிண்ணப் போட்டிகளிலிருந்து பங்களாதேஷ் விலகியதன் பின்னணியில் பாகிஸ்தானின் சதித் திட்டம் – இந்திய கிரிக்கெட் சபை குற்றச்சாட்டு
இந்தியாவில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக்கிண்ணப் போட்டிகளிலிருந்து பங்களாதேஷ் விலகியதன் பின்னால் பாகிஸ்தானின் ‘சதித் திட்டம்’ இருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியுள்ளதாவது, பாகிஸ்தான் இந்த விவகாரத்தில் தேவையற்ற முறையில் தலையிடுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் அநாவசியமாக இந்த விவகாரத்தில் மூக்கை நுழைக்கிறது. பங்களாதேஷைத் தூண்டிவிடுவதில் அவர்களுக்குப் பெரும் பங்கு உண்டு என அவர் கூறியுள்ளார்.
கடந்த காலத்தில் பங்களாதேஷிற்கு பாகிஸ்தான் என்ன செய்தது என்பது உலகிற்கே தெரியும். இன்று அவர்கள் மீது திடீர் அனுதாபம் காட்டுவது போல நடித்து, பங்களாதேஷ் கிரிக்கெட் சபையை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல பாகிஸ்தான் முயற்சிக்கிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
பாதுகாப்பு மற்றும் அரசியல் காரணங்களைக் கூறி பங்களாதேஷ் இந்தியா வர மறுப்பதன் பின்னணியில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தூண்டுதல்கள் இருப்பதாக ஏற்கனவே சந்தேகங்கள் நிலவின.
அந்தச் சந்தேகங்களை உறுதிப்படுத்தும் வகையிலேயே ராஜீவ் சுக்லாவின் தற்போதைய கருத்துக்கள் அமைந்துள்ளன.
எனினும், ராஜீவ் சுக்லாவின் கருத்து தொடர்பில் பாகிஸ்தான் உத்தியோகபூர்வ கருத்துகள் எதனையும் தெரிவிக்கவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
