சம்பியன்ஸ் கிண்ண தொடரால் பாக். கிரிக்கெட் சபைக்கு பாரிய இழப்பு

பாகிஸ்தானில் அண்மையில் நடைபெற்று முடிந்த சம்பியன்ஸ் கிண்ண தொடர் காரணமாக பாக். கிரிக்கெட் சபைக்கு இந்திய நாணயப்படி 772 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடந்தது. சொந்த மண்ணில் 29 ஆண்டுக்குப் பின் முதல் ஐ.சி.சி. தொடர் என்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஆடம்பரமாக தயாரானது. கராச்சி, லாகூர், ராவல்பிண்டி மைதானங்களை தயார்படுத்த நிர்ணயிக்கப்பட்டதை விட 50 வீதம் அதிகமாக 503 கோடி ரூபா வரை செலவிட்டது.
போட்டிக்கு தயாராக 347 கோடி ரூபா செலவு (மொத்தம் ரூ. 850 கோடி) செய்துள்ளது. ஆனால் பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் ஒரு போட்டியில் மட்டும் (எதிர் நியூசிலாந்து) பங்கேற்றது. பங்களாதேஷுக்கு எதிரான போட்டி மழையால் முழுமையாக ரத்தாக, லீக் சுற்றுடன் வெளியேறியது. தவிர மழையால் கூடுதலாக இரு போட்டி ரத்தாகின.
இதனால் போட்டி நடத்தியதற்கு ஐ.சி.சி. தந்த கட்டணம், டிக்கெட், விளம்பரங்கள் வழியாக மொத்தம் 78 கோடி ரூபா மட்டுமே பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஈட்டியுள்ளது. சுமார் 772 கோடி ரூபா வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ‘தி டெலிகிராப்’ பத்திரிகை வெளியிட்ட செய்தியில், ‘சம்பியன்ஸ் கிண்ண தொடரில் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க, தேசிய ‘டி-20′ சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கும் வீரர்கள் சம்பளம் 90 வீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. வீரர்கள் குறைந்த விலை கொண்ட ஹோட்டலில் தங்க வைக்கப்படுவர்’ என தெரிவித்துள்ளது.