
ஈரானுடன் உடன்படிக்கை செய்யத் தயாரில்லை – டொனால்ட் ட்ரம்ப்
ஈரானுடன் தற்போதைக்கு எந்தவொரு சமாதான உடன்படிக்கையையும் செய்துகொள்ளத் தாம் தயாராக இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஊடக நிறுவனமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் ட்ரம்ப் இதனை தெரிவித்துள்ளார் .
ஈரானுக்கு உடன்படிக்கை செய்து கொள்ளும் தேவை உள்ள போதிலும், அதற்கான நிபந்தனைகள் இன்னும் திருப்திகரமாக இல்லை எனவும் இதனால் தற்போதைக்கு உடன்படிக்கை செய்யும் எண்ணம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உடன்படிக்கையின் பிரதான நிபந்தனையாக, ஈரான் தனது அணுசக்தி அபிலாஷைகளை முற்றாகக் கைவிட வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். எனினும், ஏனைய நிபந்தனைகள் எவை என்பதை அவர் பகிரங்கப்படுத்தவில்லை .
சர்வதேச ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாக்க உதவுவதற்கு சில நாடுகள் முன்வந்துள்ளதாகவும், இராஜதந்திர காரணங்களுக்காக அந்த நாடுகளின் பெயர்களை இப்போது வெளியிட முடியாது என்றும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார் .
இதேநேரம் ஈரானின் பொருளாதார முதுகெலும்பாகக் கருதப்படும் ‘கார்க்’ (Kharg) எண்ணெய் ஏற்றுமதி மையத்தை அமெரிக்கா முழுமையாக அழித்துள்ளதாக ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார் .
