நோர்வூட் பிரதேச சபையும் தேசிய மக்கள் சக்தி வசமானது

நோர்வூட் பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் தலைவர், உபதலைவர் தெரிவு இன்று காலை 09.00 மணியளவில் நோர்வூட் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஜெஹனஸ் பிரான்சிஸ் எலன், திறந்த வாக்கெடுப்பு மூலம் நகர சபையின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், அதே நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் நடராஜா சிவக்குமார் சபையின் உப தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நோர்வூட் பிரதேச சபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர் ஆகிய தெரிவுகள் மத்திய மாகாண உள்ளுராட்சி மன்ற ஆணையாளர் ஏ.எம்.கே.பி.கே. சமிலா அத்தபத்து தலைமையில் இடம்பெற்றது. இதில் தேசிய மக்கள் சக்தி சார்பாக ஜெஹனஸ் பிரான்சிஸ் எலன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக கணபதி குழந்தைவேல் ரவி ஆகியோர் தலைவருக்காக போட்டியிட்டனர்.
இதில் திறந்த வாக்கெடுப்பு இடம்பெற்றது. இதில் 12 வாக்குகளை பெற்று சபையின் தலைவராக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஜெஹனஸ் பிரான்சிஸ் எலன் தெரிவு செய்யப்பட்டார்.
எதிராக போட்டியிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக கணபதி குழந்தைவேல் ரவி 07 வாக்குகளே பெற்றுக்கொண்டார்.
தலைவரின் தெரிவின் போது ஜனநாயக தேசிய கூட்டமைப்பு சார்பாக ஒருவர் நடுநிலை வகித்தார்.
இதே இந்த சபைக்கு உப தலைவர் தெரிவில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக நடராஜா சிவக்குமார் பெயர் முன்மொழியப்பட்டது. அதனையடுத்து, ஐக்கிய தேசிய கட்சி சார்பாக கொலந்தவேலு இராஜேந்திரன் பெயர் முன்மொழியப்பட்டது. இதன்போது, ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக நடராஜா சிவக்குமார் 12 வாக்குகளை பெற்று சபையின் உப தலைவராக தெரிவு செய்யப்பட்டார். ஐக்கிய தேசிய கட்சி சார்பாக போட்டியிட்ட கொலந்தவேலு இராஜேந்திரன் 06 வாக்குகளே பெற்றுக்கொண்டார்.
உப தலைவர் தெரிவின் போது, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக ஒருவரும், ஜனநாயக தேசிய கூட்டமைப்பு சார்பாக ஒருவரும் நடுநிலை வகித்தனர்.
. நோர்வூட் பிரதேச சபை (20 உறுப்பினர்கள்)
• தேசிய மக்கள் சக்தி – 06
• ஐக்கிய மக்கள் சக்தி – 05
• இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் – 06
• சுயேட்சை குழு – 01
• ஐக்கிய தேசியக் கட்சி – 01
• ஜனநாயக தேசிய கூட்டமைப்பு – 01
(க.கிஷாந்தன்)