எப்படியான சவால் வந்தாலும் பெருந்தோட்ட மக்களுக்கு சம்பள உயர்வை வழங்குவது உறுதி

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எத்தடை வரினும் நாம் சம்பள உயர்வை நிச்சயம் பெற்றுக்கொடுப்போம். அவர்களுக்குரிய உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
அரசாங்கத்துக்கு எதிராக பிரமாண்ட அறிவிப்புகளை விடுத்த கூட்டு எதிரணி எனக் கூறிக்கொள்ளும் தரப்பினர், தற்போது திடீர் பின்வாங்கலை மேற்கொண்டுள்ளனர். ஏனெனில் மக்கள் எமது பக்கமே உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“அரசாங்கத்தை விரட்யடிப்பதற்குரிய முதலாவது வேட்டு நுகேகொடையில் வைக்கப்படும் என அன்று கூறினார்கள். ஆனால் உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்தை நினைவு படுத்துவதற்காகவே பேரணி என இன்று குறிப்பிடுகின்றனர்.
அரசாங்கம் என்ன செய்கின்றது என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரமே நாம் செயற்படுகின்றோம். மக்களுக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்.
அதேவேளை, தேசிய மக்கள் சக்தி புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டுசென்ற தரப்பினரே இன்று பொருளாதாரம் பற்றி கேள்வி எழுப்புகின்றனர்.” எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
