நிதிஷ் குமார் 10வது முறையாக பிஹாரின் முதலமைச்சராகின்றார்

பிஹாரில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், நிதிஷ் குமார் 10வது முறையாக மீண்டும் முதல்மைச்சராக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், எதிர்வரும் 19ஆம் திகதி பதவியேற்பு விழா ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களை கைப்பற்றி அபார வெற்றியை பதிவுசெய்துள்ளது.
இந்நிலையில், பிஹாரில் ஆட்சி அமைப்பது தொடர்பில் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
பிஹார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் பாட்னாவில் நேற்று கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிஹார் சட்டமன்ற தேர்தலின் புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள ஐக்கிய ஜனதா தள கட்சி உறுப்பினர்களின் கூட்டம் பாட்னாவில் இன்று நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் ஐக்கிய ஜனதா தள சட்டப்பேரவைத் தலைவராக நிதிஷ் குமார் தெரிவுசெய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஆளுனரை சந்தித்து பதவி விலகல் கடிதத்தை கையளிக்க உள்ளதுடன், புதிதாக ஆட்சியமைக்கவும் நிதிஷ் குமார் உரிமை கோருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 19ஆம் திகதி நிதிஷ் குமார் 10வது முறையாக மீண்டும் முதல்மைச்சராக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
