வவுனியாவில் வீட்டு வளாகத்தில் இருந்து ஒன்பது அடி நீளமான முதலை மீட்பு

வவுனியா கொக்குவெளி பகுதியில் வீட்டுவளவில் இருந்து 09 அடி நீளமான முதலை ஒன்று வனஜிவராசிகள் திணைக்களத்தால் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று புதன்கிழமை குறித்த வீட்டிற்கு பின்புறமுள்ள தோட்டப்பகுதியில் முதலை ஒன்று உள்ளதை வீட்டின் உரிமையாளர் அவதானித்துள்ளார். அதனை துரத்துவதற்கு முற்பட்ட போது குறித்த காணியில் அமைந்துள்ள கைவிடப்பட்ட கிணற்றில் முதலை வீழ்ந்துள்ளது.
இதனையடுத்து அவரால் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து இன்றையதினம் குறித்த பகுதிக்கு சென்ற வனஜீவராசிகள் திணைக்களத்தினர் காணியில் அமைந்துள்ள கிணற்றில் இருந்து குறித்த முதலையினை பிடித்துச்சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.