
எச்-1பி விசா வழங்க புதிய நடைமுறை அமல் : அமெரிக்காவின் முடிவால் இந்தியர்களுக்கு சிக்கல்
குலுக்கல் முறைக்கு பதிலாக, எச்-1பி விசா வழங்க புதிய முன்னுரிமை நடைமுறையை அமல்படுத்த அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இது இந்தியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.
அமெரிக்காவில் வெளிநாட்டினர் தற்காலிகமாக தங்கி வேலை செய்வதற்காக எச்-1பி விசா வழங்கப்படுகிறது. குறிப்பாக, தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐ.டி.) திறமையான வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்த இந்த விசா பயன்படுகிறது. இப்போது குலுக்கல் முறையில் இந்த விசா வழங்கப்படுகிறது. எச்-1பி விசா பெறுபவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் ஆவர்.
இந்த சூழ்நிலையில், அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு, அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பை பறிப்பதாகக் கூறி எச்-1பி விசா நடைமுறையில் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். குறிப்பாக, விசா கட்டணத்தை 1 லட்சம் டாலராக (ரூ.90 லட்சம்) சமீபத்தில் உயர்த்தினார்.
இந்நிலையில் அதிபர் ட்ரம்ப் நிர்வாகம், நீண்டகாலமாக நடைமுறையில் இருந்த எச்-1பி பணி விசா குலுக்கல் முறைக்கு பதிலாக புதிய முன்னுரிமை நடைமுறையைக் கொண்டுவர உள்ளது. குறிப்பாக, விண்ணப்பதாரர்களின் அதிக திறமை மற்றும் அதிக ஊதியம் பெறும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்கும் புதிய ‘வெயிட்டடு அப்ரோச்’ முறை நடைமுறைக்கு வரும். இது இந்தியா உள்ளிட்ட நாடுகளின் தொடக்க நிலை பணியாளர்கள் அமெரிக்காவில் வேலை விசா பெறுவதைக் கடினமாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இந்த புதிய நடைமுறையானது 2026ஆம் ஆண்டு பிப்ரவரி 27 முதல் நடைமுறைக்கு வருகிறது. இது 2027ஆம் நிதியாண்டுக்கான விசா பதிவு காலத்தில் தொடங்கி ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் எச்-1பி விசாக்களின் விநியோகத்தை முறைப்படுத்தும்.
இதுகுறித்து அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ டிராகேசர் கூறும்போது, “தற்போது நடைமுறையில் உள்ள எச்-1பி பதிவுகளுக்கான தன்னிச்சையான குலுக்கல் முறை, அமெரிக்க முதலாளிகளால் தவறாக பயன்படுத்தப்பட்டது.
அமெரிக்கர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை விட குறைவான ஊதியத்தில் வெளிநாட்டு பணியாளர்களை இறக்குமதி செய்வதையே முதன்மையான நோக்கமாகக் கொண்டு, இந்த முறையை துஷ்பிரயோகம் செய்தனர். இதனால் இந்த முறையில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது’’ என்றார்.
