நேபாளம் பிரதமர் பதவி விலகினார் – நாட்டை விட்டு வெளியேறவும் முடிவு

நேபாளம் பிரதமர் பதவி விலகினார் – நாட்டை விட்டு வெளியேறவும் முடிவு

நேபாளத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஜெனரல் சி போராட்டங்களுக்குப் பிறகு பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலகியுள்ளார்.

திங்கட்கிழமை தொடங்கிய போராட்டங்களை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்ததை அடுத்து, இரண்டாவது நாளில் அவர் பதவி விலகியுள்ளார்.

செவ்வாய்க்கிழமை காலை, போராட்டக்காரர்கள் பிரதமர், அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு தீ வைத்தனர்.

போராட்டங்களை கட்டுப்படுத்த இன்று முக்கிய கூட்டம் கூட்டப்பட்ட நிலையில், பிரதமரின் எதிர்பாராத பதவி விலகள் அறிவிப்பு வெளியானது.

அவர் விரைவில் நாட்டை விட்டு வெளியேறக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பக்தபூரில் உள்ள பிரதமரின் இல்லம் இன்று காலை தீக்கிரையாக்கப்பட்டது.

போராட்டங்கள் வெடித்ததைத் தொடர்ந்து பதவி விலகிய உள்துறை அமைச்சர் ரமேஷ் லேக்கின் காத்மாண்டு வீடும் தீக்கிரையாக்கப்பட்டது.

திங்கட்கிழமை தொடங்கிய போராட்டங்கள் பொலிஸாருடனான மோதல்களாக விரிவடைந்தன, இதனால் 19 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தலைநகர் காத்மாண்டுவின் கலங்கி, காளிமடி, தஹாச்சல், பனேஷ்வர், மற்றும் லலித்பூர் மாவட்டத்தில் சாய்சல், சாபாகு மற்றும் டெக்கோ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் போராட்டக்காரர்கள் கூடி அரசாங்கத்திற்கு எதிராகத் திரும்பினர்.

சமூக ஊடகத் தடையை நீக்கக் கோரி தொடங்கிய போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து, தடையை விலக்கிக் கொள்ள அரசாங்கம் முடிவு செய்திருந்தது.

இருப்பினும், இதற்குப் பிறகு போராட்டத்தின் போக்கு மாறியது.

பிரதமர் பதவி விலக வேண்டும், புதிய அரசாங்கத்தை அமைக்க வேண்டும், ஊழல் அரசியல்வாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், போராட்டக்காரர்களைக் கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளுடன் இரண்டாவது நாளில் போராட்டங்கள் தீவிரமடைந்தன.

ஜெனரல் சி போராட்டம் வெடித்ததைத் தொடர்ந்து, நாட்டில் அமைதியை மீட்டெடுக்க அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தையும் கூட்டிய பின்னர் பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலகியுள்ளார்.

இன்றுமாலை 6 மணிக்கு கூட்டம் நடைபெறும் என்று அவர் அறிவித்தார். மேலும், நாட்டு மக்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கிடையில், பிரதமர் நாட்டை விட்டு வெளியேற வாய்ப்புள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காத்மாண்டுவில் உள்ள அவரது இல்லத்திற்கு அருகில் ஒரு தனியார் ஜெட் விமானம் தயார் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, மேலும் அவர் துபாய் செல்லக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டை விட்டு வெளியேறினால் தனது பொறுப்புகளை நிறைவேற்றும் பணி துணை பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிகுறிகள் உள்ளன.

Share This