எதிர்மறை விமர்சனங்களே வீழ்ச்சிக்குக் காரணம் – உலகக் கிண்ண தோல்வி குறித்து தசுன் ஷானக்க உருக்கம்

எதிர்மறை விமர்சனங்களே வீழ்ச்சிக்குக் காரணம் – உலகக் கிண்ண தோல்வி குறித்து தசுன் ஷானக்க உருக்கம்

தமது அணியைச் சுற்றி அதிகளவான வெளிப்புற எதிர்மறை விமர்சனங்கள் இருந்ததாகவும், ஆடுகளங்கள் பந்துவீச்சாளர்களுக்கு அதீத சாதகமாக இருந்ததாகவும், முக்கிய வீரர்களின் உடற்தகுதிப் பிரச்சினைகளுமே இலங்கையின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணங்கள் என அணித்தலைவர் தசுன் ஷானக்க தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 61 ஓட்டங்களால் படுதோல்வியடைந்த இலங்கை அணி, அரையிறுதி வாய்ப்பிலிருந்து வெளியேறிய முதல் அணியாக மாறியது.

கடந்த ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் பெருமளவு மோசமான முடிவுகளைச் சந்தித்திருந்த இலங்கை அணி, இந்த உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னதாகவே மக்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டிருந்தது.

“பல நேரங்களில் நாம் காண்பதும் கேட்பதும் எதிர்மறையான விடயங்களையே,” என தசுன் ஷானக்க கூறியுள்ளார்.

“கிரிக்கெட் வீரர்கள் என்ற வகையில் நாம் எவ்வளவு நேர்மறையாக இருக்க முயற்சித்தாலும், வெளியே எதிர்மறைத் தன்மையே நிலவுகிறது. இது இலங்கை கிரிக்கெட்டுக்கு ஒரு பெரிய இழப்பாகும்.

எம்மிடம் உள்ள ஒரேயொரு விளையாட்டு இதுதான், இதனை எம்மால் பாதுகாக்க முடியுமா என்பது எனக்குத் தெரியவில்லை. மைதானத்திற்கு வெளியே பார்த்தால், எத்தனை பேர் மைக்குகளுடன் நிற்கிறார்கள் என்பதை நீங்கள் காணலாம், மேலும் பலர் போட்டியைப் பார்க்காமலேயே பல விடயங்களைப் பேசுவார்கள்.” எனவும் அவர் கூறியுள்ளார்.

அணி எதிர்கொண்ட ‘எதிர்மறை விமர்சனங்கள்’ மிகவும் கடுமையாக மாறியுள்ளதால், எதிர்கால வீரர்களைப் பாதுகாப்பதற்காக நாட்டின் அரசாங்கம் தலையிட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

“ஏன் இந்த எதிர்மறை விமர்சனங்களைப் பரப்ப வேண்டும்? ஆம், நாங்கள் ஒரு உலகக் கிண்ணத்தை இழந்துள்ளோம், அதற்கான காரணங்கள் எமக்குத் தெரியும். அனைவருக்கும் கவலைகள் உள்ளன. அது பற்றிப் பேசி திருத்திக்கொள்வதை விட, எதிர்மறைத் தன்மையே முன்னிலைக்கு வந்துள்ளது. நாங்கள் விளையாடிவிட்டுச் சென்றுவிடுவோம், ஆனால் எதிர்காலத்தில் வரப்போகும் வீரர்களுக்காக, அரசாங்கத்தால் இதனை தடுத்து நிறுத்த முடியுமானால் அது அவர்களின் மனநலத்திற்குச் சிறந்ததாக அமையும்.” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சிம்பாப்வே, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளிடம் தொடர்ச்சியாக தோல்வியடைந்து இந்த உலகக் கிண்ணத் தொடரில் இருந்து இலங்கை அணி வெளியேறியுள்ள நிலையில், அணியின் மீதான விமர்சனங்கள் மீண்டும் கடுமையாக வலுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )