யாழ்ப்பாணத்தில் 17 உள்ளூராட்சி மன்றங்களிலும் தேசிய மக்கள் சக்தி போட்டி

யாழ்ப்பாணத்தில் 17 உள்ளூராட்சி மன்றங்களிலும் தேசிய மக்கள் சக்தி போட்டி

யாழ்ப்பாண மாவட்டத்தின் 17 உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிட தேசிய மக்கள் சக்தி இன்று வியாழக்கிழமை (20) வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளது.

கடற்றொழில் மற்றும் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையின் கீழ், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், ஸ்ரீ பவனந்தராஜா ஆகியோரின் பங்குபற்றலுடன் இன்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

யாழ்.மாநகர சபை, சாவகச்சேரி, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை ஆகிய நகர சபைகள், வலிகாமம் வடக்கு, கிழக்கு, மேற்கு, தென்மேற்கு, தெற்கு, வடமராட்சி கிழக்கு, பருத்தித்துறை, சாவகச்சேரி, நெடுந்தீவு, வேலணை, காரைநகர், நல்லூர், ஊர்காவற்துறை ஆகிய பிரதேச சபைளுக்குமே வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதன்போது, கடற்றொழில் மற்றும் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

”கடந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொது தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெற்ற வெற்றி மகத்தானது. அதே போன்ற ஒரு வெற்றியை இந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலிலும் பெறுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

 

நாங்கள் ஆட்சிப்பீடத்திற்கு வந்து மூன்று மாதங்கள் கடந்துள்ளன. இந்த காலப்பகுதியில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளோம். இம்முறை பாதீட்டின் மூலம் கிராமங்களுக்கும், யாழ்.மாவட்டத்திற்கும் அதிகமான நிதி ஒதுக்கீடும் செய்துள்ளோம்.

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளிலிருந்து கடுகளவேணும் மாற மாட்டோம். யாழ். மாவட்டத்தில் இருக்கின்ற எல்லா சபைகளையும் கைப்பற்றி அதன் ஊடாக எமது சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். எனவே, யாழ். மாவட்ட மக்கள் சிந்தித்து திசைக்காட்டிக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

இந்த நிலையில், தேசிய ரீதியில் கிராமங்களை வெற்றிகொண்டு, ஆட்சி நிர்வாகத்தில் மக்களின் பங்குபற்றும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கு இந்த தேர்தலை நாங்கள் வாய்ப்பாக பயன்படுத்துவோம்.

அனைத்து உள்ளூராட்சி மன்றங்களையும் தேசிய மக்கள் சக்தி வெற்றி கொள்வதற்கு தேவையான உத்திகளை கையாண்டிருக்கிறோம்.

அத்தோடு, அரசியல் கைதிகளின் விடுதலை, காணிகள் விடுவிப்பு தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.” என்றார்.

Share This