‘தேசிய சுற்றுச்சூழல் வாரம்’

‘தேசிய சுற்றுச்சூழல் வாரம்’

உலக சுற்றாடல் தினமான ஜூன் மாதம் 5ஆம் திகதியை முன்னிட்டு மே மாதம் 30ஆம் திகதியிலிருந்து ஜூன் 5 ஆம் திகதி வரை சுற்றாடல் வாரமாக செயல்படுத்துவதற்கு சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தமிக்க படபெந்தி தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.


இம்முறை சுற்றாடல் தினத்தின் தொனிப்பொருளாக “பிளாஸ்டிக் பாவனையை இல்லாது ஒழிப்போம்” எனக் குறிப்பிட்டு அவர் அடிப்படை தொனிப் பொருளாக “தளுலண்ண இட தென்ன” (முளைப்பதற்கு இடமளிப்போம்) என்ற திட்டத்தின் கீழ் பல நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சுற்றாடல் தினத்தை பாரம்பரியமாக அனுஷ்டிக்காது சுற்றாடல் பாதுகாப்பை மேற்கொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு மேற்கொள்ள உள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், அச்செயற்பாடுகளை மிகவும் பொறுப்புடன் சிறந்த நாட்டிற்கும், மக்களுக்கும், உலக சமூகத்திற்கும் பொறுப்புக் கூறக்கூடிய திட்டமாக அமுல்படுத்தும் நோக்கம் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

சுற்றாடல் அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்கள் அனைத்தும், அரச நிறுவனங்கள் மற்றும் கிளீன் ஸ்ரீலங்கா செயலகம் மற்றும் சுற்றாடல் அமைப்புகள் என்பன ஒன்றிணைந்து இம்முறை சுற்றாடல் தினத்தை கொண்டாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் இது தொடர்பாக வழங்கும் சகல ஒத்துழைப்புகளையும் வழங்குமாறு பொதுமக்களிடம் அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

Share This