முஸ்லிம்கள் திசைகாட்டிக்கு வாக்களிப்பது இஸ்ரேலுக்கு ஆதரவு வழங்குவதற்கு சமம்

முஸ்லிம் மக்கள் திசைகாட்டிக்கு வாக்களிப்பது முஸ்லிம் மக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவிக்கும் இஸ்ரேலை ஆதரிப்பதற்கு சமமாகும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக கிண்ணியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது,
இந்த அரசாங்கம் இஸ்ரேலைத் திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக முஸ்லிம்கள் மீது அடக்கு முறைகளைப் பிரயோகித்து வருகின்றது. இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற செயலைக் கண்டித்து ஸ்டிக்கர் ஒட்டிய இளைஞர் ருஸ்தியை பயங்கவரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தமை இதற்கு நல்ல உதாரணமாகும்.
இஸ்ரேலியர்கள் இலங்கையில் அவர்களது சமயத்தலங்கைளை அமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ள அரசாங்கம் அதற்கு அரச பாதுகாப்பை வழங்கி வருகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இது தொடர்பில் அண்மையில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது சரியான பதில் கொடுக்க முடியாத அரசாங்கம், அந்த விடயத்தை மழுப்பினார்கள்.
பொத்துவில் அருகம்பேயில் யூதர்கள் பாலர் பாடசாலை நடத்த அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதோடு அதற்காக 5 க்கும் மேற்பட்டோருக்கு நீண்ட நாள் விசா வழங்கி வருகின்றது. இதனால் அவர்கள் நிரந்தரமாக அங்கு தங்கியுள்ளார்கள். இவர்களது பாதுகாப்பைக் காரணம் காட்டித்தான் பொத்துவில் பகுதியில் முஸ்லிம்கள் சிலர் கைது செய்யப்பட்டமை அனைவருக்கும் நினைவிலிருக்கும்.
அருகம்பே பகுதியில் பாலர் பாடசால நடத்துகிறோம் என்ற போர்வையில் யூதர்கள் நிரந்தரமாக ஏன் தங்கியுள்ளார்கள் என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும். இங்கிருந்து முஸ்லிம்களுக்கெதிரான சதித்திட்டம் ஏதும் தீட்டப்படுகின்றதா என்ற சந்தேகமும் எங்களுக்கு எழுகின்றது.
இலங்கையிலுள்ள சட்டத்தின்படி தனியார் எவரும் இலங்கை பாடத்திட்டத்தைப் போதிக்கின்ற தனியார் பாடசாலை நடாத்த முடியாது. ஆனால் அருகம்பேயில் பாலர் பாடசாலை நடாத்த யூதர்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இஸ்ரேலியர்கள் என்றால் சட்டதிட்டம் பார்க்கப்படாது என்பதற்கு இது நல்ல உதாரணமாகும்.
இந்த அரசாங்கம் இஸ்ரேலர்களைப் போசித்து பராமரிக்குமளவுக்கு முஸ்லிம்களுக்கு எதிராக அடக்கு முறைகளைப் பிரயோகித்து வருகின்றது என்பதை நாம் இவற்றிலிருந்து விளங்கிக் கொள்ள முடிகின்றது.
எனவே இந்த அரசாங்கத்துக்கு வாக்களிப்பதானது முஸ்லிம் மக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவிக்கும் இஸ்ரேலை ஆதரிப்பதற்கு சமமானது என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும் என்றார்.