அலுவலக திறப்பு விழா நிகழ்வை புறக்கணித்த சிறிதரன் எம்.பி

அலுவலக திறப்பு விழா நிகழ்வை புறக்கணித்த சிறிதரன் எம்.பி

தமிழரசுக் கட்சியின் வவுனியா அலுவலகத் திறப்பு விழா நிகழ்வை புறக்கணித்து, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மத்திய குழுக் கூட்டம் முடிவடைந்த பின் வெளியேறிச் சென்றிருந்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் வவுனியா, இரண்டாம் குறுக்குத் தெரு பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் நேற்று காலை 10 மணி முதல் மதியம் வரை நடைபெற்றது.

அதில் கட்சியின் முக்கிய உறுப்பினரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.சிறிதரன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.

மத்திய குழுக் கூட்டம் முடிவடைந்த பின் தமிழரசுக் கட்சியின் மாவட்ட அலுவலகமும், நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் அவர்களின் தொடர்பாடல் அலுவலகமும் குருமன்காடு, காளி கோவில் வீதியில் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான து.ரவிகரன், க.கோடீஸ்வரன், ஞா.சிறிநேசன், குகதாசன், சிறிநாத், இ.சாணக்கியன், கொழும்பு கிளைத் தலைவர் சட்டத்தரணி இரட்னவடிவேல் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்கள், மாவட்ட கிளையினர் என பலர் கலந்து கொண்டனர்.

ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் குறித்த அலுவலகத் திறப்பு விழாவில் கலந்து கொள்ளாது மத்திய செயற்குழுக் கூட்டத்தின் பின் வெளியேறிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This