
பேரிடரால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
நிலச்சரிவுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பாதிப்புகள் காரணமாக சுமார் 1,289 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் சுமார் 44,500 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி திசாநாயக்கவிற்கும், நிதி அமைச்சு மற்றும் தேசிய வீட்டமைப்ப அதிகாரசபை அதிகாரிகளுக்கும் இடையில் இன்று (04) காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது, அதிகாரசபையின் அதிகாரிகள் இந்த விடயம் குறித்து ஜனாதிபதிக்கு விளக்கமளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்ட முழுமையாகவும் பகுதியளவிலும் சேதமடைந்த வீடுகளை அடையாளம் காண்பது முறையான மற்றும் வெளிப்படையான வழிமுறையின்படி மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யுமாறு நிதி அமைச்சகம் மற்றும் தேசிய வீடமைப்பு அதிகார சபை (NHDA) அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தினார் .
இழப்பீட்டு செயல்முறைக்கு அவசியமான துல்லியமான தரவுகளை திறமையாக சேகரிக்க ஒரு சிறப்பு பொறிமுறையை நிறுவுமாறு ஜனாதிபதி மேலும் அறிவுறுத்தினார்.
அதிக ஆபத்துள்ள மற்றும் பேரிடர் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வாழும் மக்கள் மீண்டும் மீண்டும் இதுபோன்ற பேரிடர்களால் பாதிக்கப்படாமல் இருக்க நீண்டகால மற்றும் நிலையான தீர்வுகளை வழங்குவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த ஜனாதிபதி, இந்த முயற்சிகளை ஆதரிக்க நம்பகமான தரவுகளை சேகரிப்பதற்கு முன்னுரிமை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
