ஆமதாபாத்தில் மோடி – விபத்து இடத்தில் ஆய்வு; பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்

ஆமதாபாத் விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆறுதல் தெரிவித்தார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் நேற்று பிற்பகல் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து வெடித்துச் சிதறியது.
இதில் பயணித்த 242 பேரில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளார். மேலும், விமானம் மோதிய மருத்துவக் கல்லூரி கட்டடத்தில் இருந்த 7 மாணவர்கள் பலியான நிலையில், 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், ஆமதாபாத் விமான நிலையத்துக்கு இன்று காலை வந்த பிரதமர் நரேந்திர மோடி, விமான விபத்து நடந்த இடத்தில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகளை பார்வையிட்டார்.
விமான விபத்து, மீட்புப் பணிகள் குறித்து அதிகாரிகள் பிரதமருக்கு விளக்கம் அளித்தனர்.
தொடர்ந்து, ஆமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு நேரில் சென்ற மோடி, விமான விபத்தில் உயிர்தப்பிய விஸ்வாஸ் என்பவரை சந்தித்து பேசினார்.
மேலும், சிகிச்சை பெற்று வரும் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கும் ஆறுதல் தெரிவித்தார்.
குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன், மாநில உள்துறை அமைச்சர் ஷர்ஷ் சங்கவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முன்னதாக, விமான விபத்து நடைபெற்றவுடன் தில்லியில் அவசர ஆலோசனையில் ஈடுபட்ட பிரதமர், உடனடியாக சம்பவ இடத்துக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகனையும் அனுப்பிவைத்தார்.