இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராணுவ கலந்துரையாடல்

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராணுவ கலந்துரையாடல்

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்புப் பங்காளித்துவத்தை ஆழப்படுத்தும் நோக்கில், 11வது இராணுவம் – இராணுவ பணியாளர் கலந்துரையாடல் (AAST), நவம்பர் 18 முதல் 20 வரை பீகாரின் போத்கயாவில் நடைபெற்றது.

இரு நாடுகளும் இணைந்து, செயல்படும் திறனை அதிகரிப்பது மற்றும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இதில் கவனம் செலுத்தப்பட்டது.

அதேசமயம், இந்திய இராணுவமும் இலங்கை இராணுவமும் இணைந்து பங்கேற்கும் 11வது ‘மித்ர சக்தி’ கூட்டுப் பயிற்சியானது, கர்நாடகாவின் பெலகாவியில் நடைபெற்று வருகிறது.

இந்தப் பயிற்சியில் ராஜ்புத் மற்றும் கஜபா படையணிகளை சேர்ந்த வீரர்கள், விமானப் படையினருடன் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையின் கீழ் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் மரபு சாரா நடவடிக்கைகளை கூட்டாக ஒத்திகை பார்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி அமைப்புகளை பயன்படுத்தி, தாக்குதல், தேடுதல் போன்ற தந்திரோபாய செயல்பாடுகளை இரு தரப்பினரும் பயிற்சி செய்து, பரஸ்பர செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதிலும், சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக் கொள்வதிலும் கவனம் செலுத்துகின்றனர்.

இந்த கலந்துரையாடலும் பயிற்சியும் பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான இரு நாடுகளின் உறுதிப்பாட்டை உறுதிப்படுத்துகின்றன.

CATEGORIES
Share This