காணி உரிமையை வலியுறுத்தி ஹட்டனில் கூட்டம்

”மலையக மக்களின் காணி பிரச்சினை இன்னும் ஒரு கொள்கை ரீதியில் தேசிய வேலைத் திட்டத்துடன் முன்னெடுக்கப்படாத நிலையில் – தற்போது அதற்கான அழுத்தங்கள் பாரியளவில் எழுந்திருப்பது முக்கியமான விடமாகும்.
அந்த வகையில் மலையக மக்களுடைய காணிக்கான போராட்டமும் அதன் வரலாறும் மிக பழமை வாய்ந்ததாக உள்ளது. மலையக மக்களுடைய காணிக்கான போராட்டம் இந்த நாடு சுதந்திரம் பெருவதற்கு முன்பதாகவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அது வரலாற்று மற்றும் சரித்திரமிக்க போராட்டம் என்பது தற்போது வெளிக் கொண்டு வரப்பட்டு அதனை மையமாக கொண்டு 2022 ம் ஆண்டு மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கம் ஒரு காணி தினத்தை பிரகடனப்படுத்தியது.
அதனை தொடர்ந்து வந்த வருடங்களில் இது மிகவும் பிரபல்யமான முறையில் முன்னெடுக்கப்பட்டு 2025 ம் வருடத்தின் காணி தினத்தினை வரும் 21ம் திகதி சனிக்கிழமை அட்டன் நகரில் முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளை மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கம் செய்து வருகின்றது என்ற தகவலை அதன் தலைவர் எஸ்.டி. கணேசலிங்கம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
காணிக்கான போராட்டம்
மலையக மக்களின் முதலாவது காணிக்கான போராட்டம் ஜூன் 21 – ஜூலை 09, 1946 காலப்பகுதியில் கேகாலையின் உருவள்ளி பெருந்தோட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது.
அப்பெருந்தோட்டத்தில் அம்மக்களின் 400 ஏக்கர் குடியிருப்பு நிலம் அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமது காணிகளைப் பாதுகாக்க முன்னெடுக்கப்பட்ட போராட்டமாக அது அமைந்திருந்தது.
இலங்கைப் பெருந்தோட்டங்களில் உள்ள இந்திய வம்சாவளித் தொழிலாளர்களின் காணி உரிமைகளைக் கோரி இலங்கை இந்திய காங்கிரஸ் தொழிற்சங்க சம்மேளத்தினால் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் கேகாலை மற்றும் களனிப் பள்ளத்தாக்கு பிரதேசங்களைச் சேர்ந்த 125,000 த்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்றிருந்தனர்.
1972 ஆம் ஆண்டின் காணிச் சீர்திருத்தச் சட்டம் குடியேற்றங்கள் உருவாகவும் காணிக் கையகப்படுத்தல்கள் நிகழவும் வழிவகுத்தது. தொடர்ச்சியான காணிக் கையகப்படுத்தல்கள் போராட்டங்களுக்கு வழிவகுத்தன. டெவோன் தோட்டத்தின் 7,000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு எதிராக மே 11, 1977 அன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது சிவானு லட்சுமணன் என்ற இளம் தோட்டத்தொழிலாளி பொலிசாரினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அதன் விளைவாக பெருந்தோட்ட நிலங்களை பறிமுதல் செய்யும் திட்டம் கைவிடப்பட்டது. அதே போன்று, 2000 ஆம் ஆண்டில், மேல் கொத்மலை நீர் மின்சார திட்டத்துக்காக அப்பிரதேச மக்களை வெளியேற்றும் முன்னெடுப்பு தொடர்ச்சியான மக்கள் போராட்டம் காரணமாக கைவிடப்பட்டது.
2014 ஆம் ஆண்டு பதுளை மாவட்டத்தின் ஹபுத்தளை பிரதேசத்தில் மேரியாவத்த பகுதியில் இடம்பெற்ற நிலச்சரிவு பேரழிவின் பின்னர், மலைநாட்டில் வாழும் மக்களுக்கு குடியிருப்புக்கு பொருத்தமான இடங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க கோரிக்கை நாட்டின் அனைத்து பாகங்களில் இருந்தும் முன்வைக்கப்பட்டது.
காணி உரிமைகள் மற்றும் ஏனைய உரிமைகளுக்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் எமது முன்னோர்கள் மேற்கொண்ட தியாகங்கள் அளப்பெரியன. மலையக மக்களின் காணி உரிமைக்கான அங்கீகாரத்தை பாதுகாக்க பல ஆர்ப்பாட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதும், அவர்களின் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளதுடன் அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் மீறல்கள் தொடர்ந்த வண்ண்முமேயுள்ளன.
எனவே, இந்தக் கோரிக்கை நாட்டின் தேசிய உரையாடலில் உள்ளடக்கப்படும் ஒரு தேவை தற்போது எழுந்துள்ளது. மலையக சமூகங்களின் காணி உரிமைகளை உறுதி செய்வதற்காகவும் காணியற்றவர்களுக்காக காணிகளைக் கோருவதற்காக ஒத்த சிந்தனையுள்ளவர்களை ஒன்று திரட்டவும் ஒரு தேசிய தினம் பிரகடணப்படுத்தப்பட வேண்டும் என மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கம் (MPPLR) நீண்ட காலமாக கோரி வருகின்றது. காணிப் பிரச்சினைகளை தீர்க்க, பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் கடந்த பதினெட்டு வருட காலமாக MPPLR பணிபுரிந்து வருகின்றது. உருவள்ளி ஆர்ப்பாட்டத்தின் நினைவு தினமான ஜுன் 21 ஆம் திகதியை “காணித் தினமாக” பிரகடணம் செய்ய வேண்டும் என இவ்வியக்கம் கோரிக்கை விடுக்கின்றது.
இதன் அடிப்படையில் நான்காவது காணி தினத்தினை எதிர்வரும் 21ம் திகதி சனிக்கிழமை அட்டன் நகரில் முன்னெடுப்பதற்கு ‘நிலமற்றோர்க்கு நிலம்’ எனம் தொணிப்பொருளில் “மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கம்” ஏற்பாடுகளை செய்து வருவதாக அதன் தலைவர் எஸ்.டி.கணேசலிங்கம் தெரிவித்தார்.