மாத்தறை சிறைச்சாலையை கொடவில பகுதிக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை

மாத்தறை சிறைச்சாலையை கொடவில பகுதிக்கு மாற்றுவதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
மாத்தறை சிறைச்சாலைக்கு கள விஜயம் மேற்கொண்டதைத் தொடர்ந்து அமைச்சர் இதனை தெரிவித்தார்.
மேலும் இந்த விஜயத்தைத் தொடர்ந்து, பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அவரது தலைமையில் சிறப்புக் கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றுள்ளது.
மாத்தறை சிறைச்சாலையில் கைதிகள் மற்றும் சிறை ஊழியர்கள் இருவரையும் பாதிக்கும் சில குறைபாடுகளை அவதானித்ததாக
அமைச்சர் கூறியுள்ளார்.
போதுமான வசதிகள் இல்லையென சுட்டிக்காட்டிய அமைச்சர் சிறைச்சாலை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் கைதிகள் கணிசமான சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவசர தீர்வாக குறித்த சிறைச்சாலையை கொடவில பகுதிக்கு மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக கூறினார்.
மாத்தறை புதிய நீதிமன்ற வளாகம் அமைந்துள்ள கொடவில பகுதியில் ஏற்கனவே நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.