
மதுரோ உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் – அமெரிக்காவுக்கு வெனிசுலா எச்சரிக்கை
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாகத் தற்போதைய உப ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸை நியமித்து வெனிசுலா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெனிசுலா மீது நேற்று திடீர் தாக்குதலை மேற்கொண்ட அமெரிக்கா, ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியைச் சிறைப்பிடித்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தியுள்ளது.
இதனையடுத்து, வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை இனி அமெரிக்க நிறுவனங்களே நிர்வகிக்கும் எனவும், தமக்குச் சாதகமான அரசாங்கம் அமையும் வரை அமெரிக்க இராணுவம் அங்கு நிலைகொண்டிருக்கும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தையடுத்து வெனிசுலாவில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, ட்ரம்பின் இந்த நடவடிக்கை சர்வதேச சட்டங்களை மீறும் செயல் என சீனா, ரஷ்யா, பிரேசில், கியூபா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை என்பன கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், வெனிசுலா உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள டெல்சி ரோட்ரிக்ஸ், அந்நாட்டு அரச தொலைக்காட்சியில் முன்னிலையாகி நாட்டு மக்களுக்கு விசேட உரையாறினார்.
“வெனிசுலாவின் ஒரே ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மட்டுமே. அவரை அமெரிக்கா உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்ய வேண்டும். எமது நாட்டு மக்களைப் பாதுகாக்க அனைத்துப் பாதுகாப்புப் படைகளையும் நாம் தயார் நிலையில் வைத்துள்ளோம்,” என அவர் இதன்போது தெரிவித்தார்.
