ஈரானில் கத்தியால் குத்திகொல்லப்பட்ட நீதிபதி

ஈரானில் நீதிபதி தனது அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.
தெற்கு ஈரானின் ஷிராஸ் நகரத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை இந்த சம்பவம் நிகழ்ந்தது. உயிரிழந்தவர் 38 வயதான எஹ்சாம் பகேரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் ஷிராஸில் நீதித்துறையில் பணியாற்றியதாக கூறப்படுகின்றது.
முன்னதாக, அவர் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்குகளைக் கையாண்ட புரட்சிகர நீதிமன்றத்தில் ஒரு சட்டத்தரணியாக இருந்துள்ளார்.
இந்த சம்பவம் ஒரு பயங்கரவாத தாக்குதல் என்றும், அடையாளம் தெரியாத இரண்டு சந்தேக நபர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.