காசாவில் போரை தொடர இஸ்ரேல் உறுதி

ஈரான் அணு நிலைகள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களால் அந்நாட்டின் அணு திட்டத்தில் சில மாதங்கள் மாத்திரமே பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக அமெரிக்காவின் ஆரம்ப கட்ட உளவு மதிப்பீடுகள் மூலம் தெரியவந்திருப்பதாக இந்த விடயம் குறித்து அறிந்த மூன்று வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் 18 உளவு நிறுவனங்களில் ஒன்றான பென்டகனின் பிரதான உளவுப் பிரிவான பாதுகாப்பு உளவு நிறுவனம் இது தொடர்பில் ஆரம்பக் கட்ட அறிக்கையை தயாரித்துள்ளது. இந்த இரகசிய அறிக்கை குறித்து தெரிந்த இரு வட்டாரங்கள் இது தொடர்பில் விபரங்களை வெளியிட்டுள்ளன.
இந்த ரகசிய அறிக்கை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் உட்பட அவரது உயர்மட்ட அதிகாரிகளின் கூற்றுக்கு முரணாக உள்ளது. சக்தி வாய்ந்த ‘பங்கர் பஸ்டர்’ குண்டுகள் உட்பட குண்டுகளைக் கொண்டு கடந்த வார இறுதியில் நடத்திய தாக்குதல்களில் ஈரானின் அணுத் திட்டம் ஒழிக்கப்பட்டுவிட்டதாக அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
ஈரானின் அணு நிலைகள் மீதான இந்தத் தாக்குதல்களில் அந்நாட்டின் அணுத் திட்டம் சீர்குலைக்கப்பட்டது என்று ஐ.நா. பாதுகாப்புச் சபையில் அமெரிக்க நிர்வாகம் நேற்று முன்தினம் (24) குறிப்பிட்டிருந்தது. இது அணுத் திட்டம் ஒழிக்கப்பட்டதாக கூறிய டிரம்பின் முந்திய கருத்துக்கு மாறாக இருந்தது.
இது தொடர்பில் வெள்ளை மாளிகை பேச்சாளர் கரோலின் லீவிட்டிடம் கேட்டபோது, ‘பதினான்கு 30,000 பௌண்ட் குண்டுகளை சரியாக அதன் இலக்குகளுக்கு வீசினால் என்ன நடக்கும் என்று எல்லோருக்கும் தெரியும்: முற்றாக அழிக்கப்பட்டு விடும்’ என்று பதில் அளித்துள்ளார்.
ஈரான் அணு அயுதம் தயாரிப்பதை தடுப்பதற்கு இந்தத் தாக்குதல் அவசியமாக இருந்தது என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். எனினும் அணு ஆயுதம் தயாரிக்கும் திட்டத்தை தொடர்ந்து நிராகரித்து வரும் ஈரான் தமது அணுத் திட்டம் அமைதி நோக்கம் கொண்டது என்று கூறி வருகிறது.
இந்நிலையில் அமெரிக்கா தாக்கிய போர்டோ, இஸ்பஹான் மற்றும் நடான்ஸ் அணு நிலைகளில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை மதிப்பிடுவது கடினமானது என்பதோடு அமெரிக்காவின் பாதுகாப்பு நிறுவனத்தால் மாத்திரமே அதனைச் செய்ய முடியுமாக உள்ளது. எனினும் ஏற்பட்டிருக்கும் சேதத்தின் அளவு அமெரிக்காவுக்கு இன்னும் சரியாகத் தெரியவில்லை என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் ரோய்ட்டர்ஸுக்கு குறிப்பிட்டுள்ளார்.
ஈரானிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் கையிருப்புகள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்றும் உண்மையில் அந்த நாட்டின் அணுத் திட்டம் ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் பின்தங்கி இருக்கலாம் என்றும் இந்த அறிக்கையில் மதிப்பிடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
மறுபுறம் இந்த அறிக்கைக்கு முரணாக ஈரானுக்கு எதிராக வரலாற்று வெற்றியை பெற்றிருப்பதாகவும் ஈரான் அணுசக்தி திட்டத்தை எம்மால் முறியடிக்க முடிந்தது என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
‘ஈரானில் யாரேனும் அதனை மீள கட்டியெழுப்ப முயன்றால், அந்த முயற்சியை முறியடிப்பதற்கு அதே உறுதியுடனும் அதே தீவிரத்துடனும் நாம் செயற்படுவோம்’ என்று நெதன்யாகு வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே பலவீனமான போர் நிறுத்தம் ஒன்று அமுலுக்கு வந்திருப்பதோடு, பாரிய வெற்றி ஒன்றுடன் இந்தப் போரை நிறைவு செய்ததாக ஈரான் ஜனாதிபதி மசூத் பசஷ்கியான குறிப்பிட்டதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போர் நிறுத்தத்தை அடுத்த ஈரான் தலைநகர் டெஹ்ரானில் வெற்றிக் கொண்டாட்டங்களும் இடம்பெற்றுள்ளன.
ஈரான் மீது கடந்த ஜூன் 13 ஆம் திகதி எதிர்பாராத தாக்குதலை இஸ்ரேல் ஆரம்பித்ததோடு ஈரானின் இராணுவத் தளபதில் மற்றும் அணு விஞ்ஞானிகள் பலரும் கொல்லப்பட்டனர். 1980களில் ஈராக்குடனான போருக்கு பின்னர் ஈரான் சந்தித்த பெரும் இழப்பாக இது இருந்தது.
மறுபுறம் இஸ்ரேலின் இராணுவ நிலைகள் மற்றும் நகரங்கள் மீது ஈரான் நடத்திய சரமாரி ஏவுகணை தாக்குதல்களில் இஸ்ரேல் இதுவரை சந்திக்காத பலத்த சேதங்களை எதிர்கொண்டுள்ளது.
மோதல் நீடித்த கடந்த 12 நாட்களில் இஸ்ரேலுடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் ஈரான் சுமார் 700 பேரை கைது செய்திருப்பதாக அந்நாட்டு அரச சார்பு நூர் நியூஸ் செய்தி நிறுவனம் நேற்று செய்தி வெளியிட்டது. இஸ்ரேலின் மொசாட் உளவு நிறுவனத்துடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் ஈரான் நேற்று மூவருக்கு மரண தண்டனை நிறைவேற்றியது.
போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து இஸ்ரேலில் நடமாடுவதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளூர் நேரப்படி கடந்த செவ்வாய் இரவு 8 மணிக்கு இஸ்ரேல் இராணுவம் தளர்த்தியதோடு, டெல் அவிவுக்கு அருகில் இருக்கும் இஸ்ரேலின் பிரதான விமானநிலைமான பென் கூரியன் விமானநிலையம் மீண்டும் திறக்கப்பட்டது. ஈரானிய வான் பறப்பும் மீண்டும் திறக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டன.
போர் நிறுத்தம் மற்றும் எண்ணெய் கப்பல்கள் செல்லும் ஹொர்மூஸ் நீரிணையை ஈரான் முடக்கும் அச்சுறுத்தல் தணிந்ததை அடுத்து எண்ணெ விலையில் வீழ்ச்சி ஏற்பட்டு மீண்டும் நேற்று அதிகரித்தது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போர் நிறுத்தத்தை அறிவித்த பின்னரும் இரு தரப்பும் அதனை மீறி ஆரம்பத்தில் பரஸ்பரம் தாக்குதல் நடத்தியது டிரம்பின் எச்சரிக்கைக்கு உள்ளானது. குறிப்பாக தனது நெருங்கிய கூட்டாளியான இஸ்ரேல் மீது அவர் அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.
ஈரான் மீறாத வரை தமது நாடு இந்த போர் நிறுத்தத்தை கடைப்பிடிக்கும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ராயேல் காட்ஸ், அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத்திற்கு தெரிவித்தார். மறுபுறம் இஸ்ரேல் போர் நிறுத்தத்தை மதிக்கும் வரை ஈரானும் மதிக்கும் என்று அந்நாட்டு ஜனாதிபதி பெசஷ்கியான் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் ஆயுதப் படை தளபதி இயால் சமிர் கூறியதாவது, ‘மோதலின் குறிப்பிடத்தக்க பாகம் முடிவுக்கு வந்தபோதும் ஈரானுக்கு எதிரான நடவடிக்கை இன்னும் முடியவில்லை’ என்றார். தமது படை தற்போது காசாவில் ஈரான் ஆதரவு போரட்டக் குழுவான ஹமாஸ் மீதான இராணுவ நடவடிக்கையில் அவதானம் செலுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இஸ்ரேலின் தாக்குதல்களில் 610 பேர் கொல்லப்பட்டு மேலும் 4,746 பேர் காயமடைந்திருப்பதாக ஈரான் நிர்வாகம் குறிப்பிட்டிருப்பதோடு ஈரானின் தாக்குதல்களில் இஸ்ரேலில் குறைந்தது 28 பேர் பலியாகியுள்ளனர். குறிப்பாக இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு முதல் முறை ஈரானிய ஏவுகணைகளால் பெருமளவில் முறியடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.