மன்னார் நகர சபையில் முறைகேடுகள் – வடக்கு மாகாண ஆளுநரிடம் முறைப்பாடு

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், மன்னார் நகர சபை மற்றும் மாந்தை மேற்கு பிரதேச சபைகளின் தவிசாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட் கிழமை (11.08.2025) நடைபெற்றது.
மன்னார் நகர சபையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் அவசரம் தேவை என்றும் ஆளுநரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
மாந்தை மேற்கு பிரதேசசபையின் வருமானத்தை அதிகரிப்பதற்குரிய வேலைத் திட்டங்களுக்கு உதவிகளை வழங்குமாறும் ஆளுநரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதேவேளை, சோலைவரி மீளாய்வை மேற்கொள்ளுமாறு ஆளுநர் கேட்டுக்கொண்டதுடன், தவிசாளர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் நிறைவேற்றக்கூடியவற்றை விரைவில் நிறைவேற்றித் தருவதாகத் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மன்னார் நகர சபையின் தவிசாளர் டானியல் வசந்தன், உபதவிசாளர் உசைன், மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ஞா.பிரேம்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.