இஸ்ரேல் மீது ஈரான் அதிபயங்கர தாக்குதல்: கொத்து குண்டுகளை வீசியதால் பெரும் சேதம் – பாதிப்பு எத்தகையது?

இஸ்ரேல் – ஈரான் போர் நேற்று 8-வது நாளாக நீடித்த நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் கொத்து குண்டுகளை வீசி அதிபயங்கர தாக்குதலை நடத்தியது. இதனால், தலைநகர் டெல்அவிவ் உட்பட பல்வேறு நகரங்களில் பிரம்மாண்ட கட்டிடங்கள் சேதமடைந்தன.
அணு ஆயுத தயாரிப்பை ஈரான் தீவிரப்படுத்துவதாக கூறி, அந்நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இரு நாடுகள் இடையிலான போர் நேற்று 8-வது நாளாக நீடித்தது. இந்த தாக்குதல்களால் இருதரப்பிலும் அதிக அளவில் உயிர் சேதம், பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது. ஈரானில் ராணுவ உயர் அதிகாரிகள், மூத்த அணு விஞ்ஞானிகள் உட்பட 224 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேலில் 25 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இஸ்ரேலின் மத்திய பகுதிகளில் மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களை குறிவைத்து ஈரான் கடந்த 19-ம் தேதி கொத்து (கிளஸ்டர்) குண்டுகளை வீசியதாக, அமெரிக்காவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் தெரிவித்தது. சுமார் 8 கி.மீ. சுற்றளவு வரை கடும் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய கொத்து குண்டுகளை இஸ்ரேல் மீது ஈரான் பயன்படுத்துவது இதுவே முதல் முறை. ஈரான் வீசிய கொத்து குண்டுகளால், இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் உட்பட பல்வேறு பகுதிகளில் பிரம்மாண்ட கட்டிடங்கள் சரிந்து கிடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலின் துறைமுக நகரமான ஹைபா மற்றும் டான் மாவட்டங்கள் உட்பட பல பகுதிகள் மீது ஈரான் நேற்று சரமாரியாக ஏவுகணைகளை வீசியது.
மைக்ரோசாஃப்ட் அலுவலகம் சேதம்: சைரன் ஒலி எழுப்பியதும் மக்கள் பதுங்கு குழிகளிலும், வணிக வளாகங்களின் கார் பார்க்கிங் பகுதிகளிலும் சென்று பதுங்கினர். ஈரான் வீசிய ஏவுகணைகள் பலகட்டிடங்கள் மீது விழுந்து வெடித்தன. பீர் சேவா நகரில் உள்ள மைக்ரோசாஃப்ட் அலுவலக கட்டிடம் மீது ஈரான் ஏவுகணை விழுந்து வெடித்ததில், பலர் காயம் அடைந்தனர். இரு நாடுகள் இடையே பதற்றத்தை தணிக்கும் விதமாக, ஜெனிவாவில் நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் அப்பாஸ் அராகசிக்கு ஐரோப்பிய நாடுகளின் அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இரு நாடுகளும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளுமாறு பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
போர் நீடித்து வரும் நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்தை கூட்டுமாறு ஈரான் மற்றும் அதற்கு ஆதரவு தெரிவிக்கும் ரஷ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இதனால், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 2-வது அவசர கூட்டம் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தாக்குதலை தள்ளிவைத்த ட்ரம்ப்: இதற்கிடையே, அமெரிக்கா, பிரிட்டன்,பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளன. ஈரான் மீது நேரடியாக போர் தொடுப்பது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆலோசனை நடத்தி வருவதாகவும், சில நாட்களில் அமெரிக்கா போர் தொடுக்கக்கூடும் என்றும் செய்தி வெளியானது. ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அது ஆபத்தான நடவடிக்கையாக
இருக்கும் என ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறினர். இது 3-ம் உலகப் போராக உருவெடுக்கும் அபாயம் இருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்தது.
இதையடுத்து, இஸ்ரேலுக்கு ஆதரவான ராணுவ நடவடிக்கை குறித்து 2 வாரங்கள் கழித்து நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ‘‘ஈரானை பேச்சுவார்த்தைக்கு அழைத்து அணு ஆயுத விஷயத்தில் முடிவை எட்ட இன்னும் போதிய வாய்ப்பு உள்ளது’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
பத்திரமாக நாடு திரும்பிய மாணவர்கள்: ஈரானில் 4,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்கியுள்ளனர். இதில் பாதி பேர் தொழிற்கல்வி பயிலும் மாணவர்கள். அவர்களை பத்திரமாக இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு அவர்களது பெற்றோர் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இஸ்ரேல் – ஈரான் போர் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இரு தரப்பிலும் சரமாரியாக ஏவுகணைகள், ட்ரோன்கள் ஏவப்படுவதால், சர்வதேச விமான போக்குவரத்துக்கு ஈரான் தனது வான்வழியை மூடியிருந்தது.
இதனால், இந்திய மாணவர்களை அர்மீனியா எல்லை வழியாக கத்தாருக்கு அழைத்து வந்து, அங்கிருந்து இந்தியாவுக்கு அழைத்து வரும் நடவடிக்கையை வெளியுறவு அமைச்சகம் மேற்கொண்டது. ஈரானில் இந்திய மாணவர்கள் 1,000 பேர் காத்திருந்ததால், இந்தியாவுக்காக தனது வான்வழியை ஈரான் நேற்று திறந்துவிட்டது. இதையடுத்து, ஈரானில் இருந்து இந்திய மாணவர்களை ஏற்றி வந்த முதல் விமானம் நேற்று இரவு டெல்லி வந்தடைந்தது. இன்றும், நாளையும் அடுத்தடுத்த விமானங்களில் இந்திய மாணவர்கள் நாடு திரும்புகின்றனர்.
8 கி.மீ. சுற்றளவை நாசமாக்கும் ‘கொத்து’ – கொத்து (கிளஸ்டர்) குண்டு, மற்ற ஏவுகணைபோல ஒரே முறையில் வெடிப்பது அல்ல. இலக்கை நெருங்கியதும், தரையில் இருந்து 7 கி.மீ. உயரத்தில் வெடிக்கும். அப்போது அதில் இருந்து வெளியேறும் ஏராளமான சிறு சிறு குண்டுகள் 8 கி.மீ. சுற்றளவுக்கு சிதறி விழுந்து, ஒவ்வொன்றும் தனித்தனியாக வெடிக்கும். குடியிருப்பு பகுதிகளில் இந்த குண்டு விழும்போது, அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.
கொத்து குண்டுகள் தரையில் விழுந்து வெடிக்காமல் கிடந்தாலும் ஆபத்துதான். வெடிக்காமல் கிடக்கும் கொத்து குண்டுகளை, யாராவது தொட்டாலோ,மிதித்தாலோ கண்ணிவெடி போல பயங்கரமாக வெடிக்கும். எனவே, ‘தரையில் கிடக்கும் சந்தேகத்துக்குரிய பொருட்களை தொட வேண்டாம். அது போன்ற பொருட்களை பார்த்தால், அவசர உதவி எண் ‘100’-க்கு போன் செய்ய வேண்டும் என மக்களுக்கு இஸ்ரேல் அரசு அறிவுறுத்தியுள்ளது.