இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் – 100 ட்ரோன்களை ஏவியுள்ளதாக தகவல்

ஈரானிய தலைநகர் தெஹ்ரான் உட்பட பல இடங்களில் இஸ்ரேல் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களுக்கு ஈரானும் பதிலடி கொடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, ஈரான் சுமார் 100 ட்ரோன்களை இஸ்ரேலுக்குள் ஏவியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், தாக்குதல்களை முறியடிக்க அதன் வான் பாதுகாப்பு அமைப்பு நடவடிக்கை எடுத்து வருவதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் (IDF) செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் எஃபி டெஃப்ரின் கூறுகையில், ஈரான் “சுமார் 100 ட்ரோன்களை இஸ்ரேலிய பிரதேசத்தை நோக்கி ஏவியது” என்று கூறுகிறார்.
எனினும், அவற்றை இடைமறிக்க பணியாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று இரவு நடந்த தாக்குதல்களில் ஈரானிய இராணுவத்தின் தலைமைத் தளபதி, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தளபதி மற்றும் ஈரானின் அவசரகால கட்டளைத் தளபதி ஆகியோர் கொல்லப்பட்டதாக டெஃப்ரின் மேலும் கூறுகிறார்.
புரட்சிகர காவல்படைத் தலைவர் ஹொசைன் சலாமி கொல்லப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகங்களும் முன்னதாக செய்தி வெளியிட்டன.
இஸ்ரேலின் தாக்குதலை தொடர்ந்து ஈரானில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.