அமெரிக்க நிலைகளை குறிவைத்து டுபாய், கத்தாரில் ஈரான் தாக்குதல்

அமெரிக்க நிலைகளை குறிவைத்து டுபாய், கத்தாரில் ஈரான் தாக்குதல்

ஈரான் – இஸ்ரேல் மோதல் இன்று 5-வது நாளை எட்டியுள்ள நிலையில், டுபாய் மற்றும் கத்தாரில் உள்ள அமெரிக்க நிலைகளைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

இது குறித்து கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலில், ‘ஈரானின் இரண்டு ஏவுகணைகள் கத்தாரை நோக்கி ஏவப்பட்டன. அதில் ஒன்றை கத்தார் வான் பாதுகாப்பு அமைப்பு வீழ்த்தியது. மற்றொன்று, அல் உதைத்தில் உள்ள அமெரிக்காவின் மிகப் பெரிய விமானப் படை தளத்தைக் குறிவைத்தது. இருப்பினும் இதில் உயிர்ச் சேதம் ஏதும் இல்லை’ என்று தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் – அமெரிக்கா தாக்குதல் தொடங்கியதில் இருந்தே, வளைகுடா பகுதியில் உள்ள பல்வேறு அமெரிக்க தளங்களையும் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஏற்கெனவே குவைத், கத்தார், டுபாய், சவூதி அரேபியா, ஓமன் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த நிலையில், கத்தாரில் அமெரிக்க நிலைகளைக் குறிவைத்து புதிய தாக்குதலை மேற்கொண்டுள்ளது ஈரான்.

அதேபோல், நேற்று செவ்வாய்க்கிழமை மாலை, டுபாயில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலகம் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கூறுகையில், “துபாயில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பார்க்கிங் பகுதியில் ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. ஊழியர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும், ஈரானின் பயங்கரவாத அரசால் அமெரிக்க தூதரங்கள் மற்றும் ராஜாங்க ரீதியிலான மற்ற அலுவலகங்கள் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது” என்றார்.

இஸ்ரேல் தாக்குதல் தீவிரம்

இதனிடையே, லெபனான் நாட்டின் மீது இஸ்ரேல் இராணுவம் மீண்டும் புதிய தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஈரான் ஆதரவுப் படைகளான ஹிஸ்புல்லா படைகளுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் விவரித்துள்ளது.

இன்று காலையில் லெபனானின் பல பகுதிகளை இஸ்ரேல் இராணுவம் குறிவைத்தது. தலைநகர் பெய்ரூட்டின் தெற்குப் பகுதியில் உள்ள பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடும்படி இஸ்ரேல் எச்சரித்துள்ளது.

லெபனான் மீது இஸ்ரேல் இந்தத் தாக்குதலை தொடங்கியதில் இருந்தே ஏராளமான அப்பாவி பொதுமக்கள் இறந்துவிட்டதாக, லெபனான் பொதுச் சுகாதார அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

அதேபோல், ஈரான் தலைநகர் டெஹ்ரானின் கிழக்குப் பகுதியில் இன்று புதன்கிழமை பிற்பகலில் புதிய தாக்குதல்களை தொடங்கியுள்ளது இஸ்ரேல். இதற்கு இஸ்ரேல் இராணுவம், ‘விரிவான தாக்குதல்’ என்று பெயரிட்டுள்ளது.

இதுவரை நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஈரானில் 2000 இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ‘விரிவான தாக்குதல்’ என்ற பெயரில் இஸ்ரேல் நடத்தவுள்ள தாக்குதல் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் எழுகிறது.

அதேவேளையில், உள்ளூர் ஊடகத்துக்கு பேட்டியளித்த ஈரான் மூத்த தலைவர் ஒருவர், “இஸ்ரேல் இன்று ஈரானின் பல்வேறு பகுதிகளிலும் லெபனானில் குடியிருப்புப் பகுதிகளிலும் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல்களுக்கு அஞ்சி பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை. அமெரிக்கா மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அவர்களுடன் சமரசத்துக்கான எந்தவொரு அடித்தளமும் இல்லை. எங்கள் விருப்பப்படி இந்தப் போர் தொடரும்” என்று கூறியுள்ளார்.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )