நாட்டில் பாதுகாப்பற்ற சூழல் – இனியும் மக்கள் ஏமாறக் கூடாது

நாட்டில் பாதுகாப்பற்ற சூழல் – இனியும் மக்கள் ஏமாறக் கூடாது

சமகால அரசாங்கம் நாட்டில் குற்ற செயலில் ஈடுபட்டு வரும் கும்பல் மற்றும் கொலைக் கும்பல்களை கட்டுப்படுத்துவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த போதிலும், அரசாங்கம் தனது பணிகளை நிறைவேற்ற முடியாமல் திணறுகிறது. முதுகெலும்பை நிமிர்த்தி, மக்களின் அடிப்படை உரிமைகளை பேணிக் கொண்டு, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கான இயன்ற அதிகபட்ச நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திடம்  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரியுள்ளார்.

இந்நாட்டு மக்கள் எப்போதும் மேடைப் பேசுக்கள் மற்றும் மேடைக் கதைகளால் ஏமாற்றப்படுகிறார்கள். ஏமாறுகிறார்கள். அரசியல்வாதிகளின் மேடைப் பேச்சுக்களுக்கும் செயற்பாடுகளுக்கும் மத்தியிலும் காணப்படும் இடைவெளியை இப்போதாவது நாட்டு மக்கள் நன்றாக புரிந்து புத்திசாலித்தனமாக தமது அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிடின் விளைவுகளை மக்கள் அனுபவிக்க நேரிடும். தேசிய பாதுகாப்பிற்கு பதிலாக சமூகமே பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அநுராதபுர நகரில் இன்று (28) காலை அடமஸ்தானத்தை வழிபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கூறினார்.

”குற்றங்களைத் தடுக்க எதிர்க்கட்சியின் ஆதரவை அரசாங்கம் கேட்பதற்கு முன்னமே நாம் எமது ஆதரவை தெரிவித்து விட்டோம். இந்த அரசாங்கத்திற்கு நாட்டை ஆளும் தொலைநோக்குப் பார்வையும் நோக்கும் இல்லை. மேடைகளில் கனவு உலகங்களை உருவாக்குவதும், நாட்டை ஆள்வது என்பதும் இரு வேறு விடயங்களாகும்.

எதிர்க்கட்சி என்ற வகையில், ஐக்கிய மக்கள் சக்திக்கு இந்நேரத்தில் உள்ள ஒரே சவால் மக்களை நன்றாக வாழ வைப்பதாகும். மக்களின் வாழ்க்கையை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். பேச்சாலும் செயலாலும் மக்களின் துன்பத்தைப் போக்க எம்மாலான சகல வழிகளிலும் முயற்சிப்போம். நடவடிக்கை எடுப்போம். செயல்படுவோம்.

வெளிநாட்டு  நேரடி முதலீட்டைக் கொண்டு வந்து நாட்டை அபிவிருத்தியின் பால் இட்டுச் செல்ல வேண்டும். அரசாங்கமானது இதனையே ஆற்ற வேண்டும். இதற்கு பாரிய மூலோபாயத் திட்டமொன்று தேவை. அவ்வாறான திட்டம் இந்த அரசாங்கத்திடம் இல்லை.

தற்போது பிரதேச செயலாளர்கள், கல்வித்துறைகளில் கடமையாற்றும் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு, ஆளுந்தரப்பினரின் நண்பர்களை அப்பதவிகளில் நியமித்து, அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பெருமளவிலான அரச ஊழியர்களால் தெரிவு செய்யப்பட்ட இந்த அரசாங்கமானது, அரச ஊழியர்களை அவமரியாதை செய்து வருகிறது.” என்றும் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தினார்.

Share This