ட்ரம்பின் வரிப்போரை எதிர்கொள்ள இந்தியா புது வியூகம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வரிவிதிப்பு மிரட்டலை சமாளிக்கும் வகையில், ஏற்றுமதியை ஊக்குவிக்க 20 ஆயிரம் ரூபா கோடியில் சிறப்பு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தயாராகி வருகிறது.
இந்திய பொருட்களின் இறக்குமதிக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் 25 சதவீத வரி விதிப்பை அமுல்படுத்தியுள்ளார்.
மேலும், ரஷ்யாவில் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய், ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்வதால் கூடுதல் அபராதமும் செலுத்த நேரிடும் என்று இந்தியாவை எச்சரித்துள்ளார்.
இந்த வரி விதிப்பு நாளை முதல் அமுலுக்கு வரவுள்ள நிலையில் ஏற்றுமதியாளர்களை பாதுகாக்க இந்தியா 20 ஆயிரம் ரூபா கோடி மதிப்பிலான ஒரு மிகப்பெரிய ஏற்றுமதி திட்டத்தை தயாரித்து வருகிறது.
தற்போதைய வர்த்தக நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் இருந்து ஏற்றுமதியாளர்களைப் பாதுகாக்க புதிய விரிவான உத்திகளுடன் கூடிய இந்த ஏற்றுமதி திட்டத்தை மத்திய அரசு அடுத்த சில வாரங்களில் செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘பிராண்டு இந்தியா’ பெயரில் பொருட்களை சந்தைப்படுத்துமாறு வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகம் ஏற்றுமதியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்த திட்டம் ஏற்றுமதியாளர்களை சர்வதேச வர்த்தக ஏற்ற இறக்கங்கள் மற்றும் சந்தை நிச்சயமற்ற தன்மைகளிலிருந்து பாதுகாக்கும் என்று அரசு நம்புகிறது. இதனை வரும் செப்டம்பர் மாதத்துக்குள் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.