
‘அருணாச்சலப் பிரதேசத்தினரின் இந்திய பாஸ்போர்ட் செல்லாது’ – ஷாங்காய் விமான நிலையத்தில் பெண் பயணியை அலைக்கழித்த சீன அதிகாரிகள்
அருணாச்சலப் பிரதேசத்தில் வசிப்பவரின் இந்திய பாஸ்போர்ட் செல்லாது என ஷாங்காய் விமான நிலையத்தில் இந்திய பெண் பயணிக்கு சீன குடியுரிமை அதிகாரிகள் தொந்தரவு கொடுத்துள்ளனர்.
அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்தவர் பெமா வாங் தாங்டாக். இவர் லண்டனில் இருந்து ஜப்பான் சென்றுள்ளார். வழியில் சீனாவின் ஷாங்காய் விமான நிலையத்தில் இறங்கி 3 மணி நேரத்துக்குப்பின் மாற்று விமானத்தில் ஜப்பான் செல்ல திட்டமிடப்பட்டிருந்தார். கடந்த 21ம் திகதி இவர் ஷாங்காய் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, இவரது இந்திய பாஸ்போர்ட் செல்லாது என சீன குடியுரிமை அதிகாரிகளும், சீன ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவன அதிகாரிகளும் கூறியுள்ளனர்.
காரணம் அவரது பாஸ்போர்ட்டில் பிறந்த இடம் அருணாச்சலப் பிரதேசம் என குறிப்பிடப்பட்டிருந்தது. அருணாச்சலப் பிரதேசம் சீனாவில் இருக்கும் பகுதி எனக் கூறி, அவரது இந்திய பாஸ்போர்ட் செல்லாது என கூறி பெமா வாங்கை சீன அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 18 மணி நேரத்துக்கு மேலாக அவர் ஷாங்காய் விமான நிலையத்தில் சிறைவைக்கப்பட்டார். அவரது பாஸ்போர்ட்டை முடக்கி, அவர் ஜப்பான் செல்வதையும் தடுத்து நிறுத்தினர்.
அப்போது பெமா வாங் சீன பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறி சீன அதிகாரிகள் கேலி செய்துள்ளனர். விமான நிலையத்தில் உள்ள உணவு விடுதி மற்றும் இதர வசதிகளை பெமா வாங் பயன்படுத்த அனுமதிக்கவில்லை. பின்னர் லண்டனில் உள்ள நண்பர் மூலம் ஷாங்காய் நகரில் உள்ள இந்திய தூதரகத்தை பெமா வாங் தொடர்பு கொண்டார். இந்திய தூதரக அதிகாரிகள் தலையிட்டு பெமா வாங்கை ஜப்பானுக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பெமா வாங் தாங்டாக் கூறுகையில், “இது இந்திய இறையாண்மை மீதான நேரடி தாக்குதல். இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடியும், இந்திய அதிகாரிகளும் சீன அரசுடன் பேச வேண்டும். அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த இந்தியர்கள் வெளிநாடுகள் செல்லும்போது, அவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்” என கூறியுள்ளார். இந்தியா – சீனா இடையே ஏற்பட்ட மோதல் முடிந்த நிலையில், சீன குடியுரிமை அதிகாரிகள் அத்துமீறலில் ஈடுபட்டுஉள்ளனர்.
