இந்திய சுரங்கத்துறை பிரதிநிதிகள் இலங்கை விஜயம்; முதலீடுகள் குறித்து ஆராய்வு

இந்திய அரசின் சுரங்க அமைச்சு தலைமையிலான பிரதிநிதிகள் குழு சுரங்கங்கள் மற்றும் கனியவளத் துறையில் சாத்தியமான ஒத்துழைப்புகளை ஆராய்வதற்காக இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
இந்தியாவின் முன்னணி அரச சுரங்க நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவினர் இதில் பங்கேற்றிருந்தனர்.
இந்த விஜயத்தின் போது, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியைச் சந்தித்த இப்பிரதிநிதிகள் , Kahatagaha Graphite Lanka Ltd., Lanka Mineral Sands Ltd., புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் (GSMB), and Lanka Phosphate Ltd. உள்ளிட்ட இலங்கை அரசுக்குச் சொந்தமான கனியவள நிறுவனங்களின் (SOEs) தலைவர்களுடன் கலந்துரையாடியிருந்தனர்.
முதலீட்டு சபை (BOI) பணிப்பாளர் நாயகம் மற்றும் அரசின் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளுடனும் சந்திப்புகள் இடம்பெற்றிருந்தன.
முதலீடுகள் மற்றும் ஒத்துழைப்பு வாய்ப்புகளை ஆராய்தல், சுரங்க தொழில்நுட்பங்களில் நவீன தொழில்நுட்ப ஒத்துழைப்பை ஊக்குவித்தல் மற்றும் கனியவளத் துறையில் பெறுமதிசேர் கூட்டு முயற்சிகள் குறித்து கலந்துரையாடுதல் இந்த விஜயத்தின் நோக்கமாகும்.
இந்திய அரசின் நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை இணையமைச்சர் ஸ்ரீ சதீஷ் சந்திர துபே மற்றும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி ஆகியோருக்கு இடையே கனியவளத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து 2025 பெப்ரவரி 15 அன்று புதுடில்லியில் நடைபெற்ற சந்திப்பின் அடிப்படையில் இந்த விஜயம் அமைந்துள்ளது. அதைத் தொடர்ந்து, 2025 மார்ச் 10 அன்று இந்திய அரசின் சுரங்க அமைச்சின் செயலாளருக்கும், இலங்கை அரசின் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் செயலாளருக்கும் இடையே சந்திப்பும் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.