மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம் இந்தியா வசமானது

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம் இந்தியா வசமானது

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி முதல் முறையாக சாம்பியனாகியுள்ளது.

மும்பையில் நேற்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில் 52 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இந்திய மகளிர் அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

மழை காரணமாக சுமார் இரண்டு மணி நேரம் தாமதமாகவே இந்தப் போட்டி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச முடிவெடுத்திருந்தது.

இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 298 ஓட்டங்களை குவித்திருந்தது.

இந்திய அணி சார்பில் ஷெபாலி வர்மா 87 ஓட்டங்களையும், தீப்தி சர்மா 58 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இதனையடுத்து 299 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா அணி 45.5 ஓவர்களின் 246 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

அந்த அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனையும், அணித் தலைவருமான லாரா வால்வார்ட் தனி ஒருவராக போராடி சதம் அடித்திருந்தார். எனினும் அவரின் முயற்சி கை கூடவில்லை.

போட்டியில் முடிவில் இந்திய அணி 52 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் தீப்தி சர்மா  ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

போட்டியில் சிறந்த வீராங்கனையாக ஷெபாலி வர்மாவும், தொடர் நாயகியாக தீப்தி சர்மாவும் தெரிவு செய்யப்பட்டனர்.

Share This