
இந்தியாவும் ஐரோப்பாவும் இணைந்தால் சர்வதேச அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்
இந்தியாவும் ஐரோப்பாவும் இணைந்தால் சர்வதேச அரசியல், பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து ஆகிய நாடுகள் இணைந்து கடந்த 1991-ம் ஆண்டு `வெய்மர் டிரைஆங்கிள்’ என்ற கூட்டமைப்பை உருவாக்கின. ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு, பொருளாதாரத்தை மேம்படுத்த இந்த கூட்டமைப்பு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
`வெய்மர் டிரைஆங்கிள்’ கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். ஐரோப்பிய நாடுகள் அல்லாத ஒரு நாட்டின் பிரதிநிதி இந்த மாநாட்டில் பங்கேற்பது இதுவே முதல்முறை.
இந்த மாநாட்டுக்கு பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: இந்தியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான உறவு வலுவடைந்து வருகிறது. ஐரோப்பாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வது தொடர்பாக கடந்த சில வாரங்களாக விரிவான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
மேலும் தொழில்நுட்பம், செமி கண்டக்டர், ரயில்வே, பாதுகாப்பு, விமான போக்குவரத்து ஆகிய துறைகளில் இருதரப்பும் இணைந்து பணியாற்றுவது குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்படுகிறது.
சர்வதேச அரசியல், பொருளாதாரத்தில் ஐரோப்பா மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவும் ஐரோப்பாவும் இணைந்தால் சர்வதேச அரசியல், பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
ஜெர்மனி பிரதமர் பிரெட்ரிக் மெர்ஸ், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் ஆகியோர் விரைவில் இந்தியாவுக்கு வருகை தர உள்ளனர். அடுத்தடுத்து பல்வேறு ஐரோப்பிய தலைவர்களும் இந்தியாவில் பயணம் மேற்கொள்ள உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உக்ரைன் போர் காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டிருக்கிறது. மேலும் கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்காவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் பகிரங்கமாக போர்க்கொடி உயர்த்தி உள்ளன. தென்சீனக் கடல், தைவான் விவகாரங்களில் ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து சீனாவை கடுமையாக எதிர்த்து வருகின்றன.
குடியரசு தின விழாவில்.. இந்த சூழலில் இந்தியா, ஐரோப்பிய நாடுகள் இடையிலான உறவு மிகவும் வலுவடைந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வரும் 26-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வோன் டெர் லியென், ஐரோப்பிய கவுன்சிலின் தலைவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான அந்தோணியோ கோஸ்டா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.
