உப்பின் விலையை தன்னிச்சையாக அதிகரித்தால் கட்டுப்பாட்டு விலை கொண்டுவரப்படும்

கூட்டுறவு வங்கி கட்டமைப்பு உள்ளிட்ட கூட்டுறவுத் துறைய நெறிமுறைப்படுத்துவதற்குப் புதிய சட்டங்களை விரைவில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
தற்போது பொதுமக்களுக்கு உப்புத் தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்தாலும், சந்தையில் உப்பு விலை அதிகரிக்கப்படுவது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
எனவே, அதிக இலாபம் ஈட்டும் நோக்கில் உப்பின் விலையை நியாயமற்ற முறையில் அதிகரிப்பதற்கு எவராவது முயற்சித்தால், எதிர்காலத்தில் உப்பிற்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சுத் தொடர்பில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் குறித்துப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.
இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் செயற்பாடுகள் குறித்து அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இங்கு விளக்கமளித்தனர்.