முடிந்தால் அதை செய்து காட்டுங்கள் – நாமல் எம்.பிக்கு சவால்

முடிந்தால் அதை செய்து காட்டுங்கள் – நாமல் எம்.பிக்கு சவால்

தேர்லுக்கு முன்னரும், தேர்தலுக்கு பின்னரும் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் சொத்து விபரங்களை வெளியிட்டிருக்கின்றோம்.

முடியுமாகயிருந்தால் நாமல் ராஜபக்ச மற்றும் ஏனைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது சொத்துவிபரங்களை வெளிப்படுத்தி காட்டுங்கள் என மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு சவால் விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையினால் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீட்டு திருத்தத்திற்கான காசோலை வழங்கும் நிகழ்வு இன்று (17) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 43 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீடுகள் திருத்த வேலைக்கான நிதி வழங்கப்பட்டிருந்தது.

எமது பிரதேச மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய விடயங்களுக்கு நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டு அவற்றை செய்து கொண்டு வருகின்றோம்.

நாங்கள் வழங்கிய வாக்குறுதிகளை படிப்படியாக செய்து வருகின்ற நேரங்களில் எங்களுக்கு எதிராக எதிர் கட்சியினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அதில் எங்களது அமைச்சர்களதும் நாடாளுமன்ற உறுப்பினர்களதும் சொத்து விவரங்கள் தொடர்பான விமர்சனங்கள் பேசப்பட்டு கொண்டு வருகின்றது.

வசந்த விக்ரமசிங்க அவர்களது சொத்து விபரம் தொடர்பாக இன்று எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்னர்.

நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னரும் சரி இப்போதும் சரி, எங்களது சொத்து விவரங்களை தொடர்ச்சியாக வெளிப்படுத்திக் கொண்டு வருகின்றோம்.

எங்களது சொத்து விபரங்களை தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னரும் வெளிப்படுத்தி இருந்தோம் தேர்தலுக்கு பின்னரும் பதவிகளை பொறுப்பேற்றதன் பின்னரும் சொத்து விவரங்களை வெளியிட்டு வருகின்றோம்.

முடியுமாக இருந்தால் எதிர்க்கட்சியில் இப்பவர்களின் சொத்து விபரங்களை பகிரங்கமாக வெளிப்படுத்த முடியுமா? இயலும் என்றால் வெளிப்படுத்தி காட்டுங்கள் என்றார்.

Share This