எரிபொருள் வரிசை தொடர்ந்தால் மீளவும் QR குறியீடு அறிமுகப்படுத்த கட்டாயம் ஏற்படும் – அரசாங்கம் எச்சரிக்கை

எரிபொருள் வரிசை தொடர்ந்தால் மீளவும் QR குறியீடு அறிமுகப்படுத்த கட்டாயம் ஏற்படும் – அரசாங்கம் எச்சரிக்கை

அச்சம் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொது மக்கள் வரிசையில் நின்று எரிபொருள் வாங்கும் செயற்பாடு தொடர்ந்தால் மீளவும் QR குறியீடு அறிமுகப்படுத்த கட்டாயம் ஏற்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எரிசக்தி பிரதி அமைச்சர் அக்ரம் இலியாஸ் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருள் பெற்று வருகின்றனர்.

இதனால் செயற்கையாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நிலை நீடித்தால் மீளவும் QR குறியீடு அறிமுகப்படுத்த கட்டாயம் ஏற்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை தனது எரிபொருளை முதன்மையாக மத்திய கிழக்கு பிராந்தியங்களிலிருந்து அல்லாமல் சிங்கப்பூர், இந்தியா, மலேசியா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளிலிருந்து பெறுகிறது என்று அமைச்சர் விளக்கியுள்ளார்.

தொடர்ந்து பீதியுடன் எரிபொருட்களை வாங்குவது பவுசர் லொரிகள் மூலம் மேற்கொள்ளப்படும் விநியோக செயல்முறையை சீர்குலைக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும் சீரான விநியோகத்தை உறுதி செய்ய அரசாங்கத்திற்கு ஒத்துழைக்குமாறு பொதுமக்களிடம்  அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையில், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) இன்று போயா விடுமுறை நாளாக இருந்தபோதிலும், அதன் வழக்கமான செயற்பாடுகளில் இருந்து விலகி, எரிபொருள் வழங்குவதாக அறிவித்தது.

தற்போதைய தேவை அதிகரிப்பு காரணமாக எரிபொருள் நிலையங்களில் அவற்றின் இருப்பு தீர்ந்து மூடப்பட்டால், எரிபொருள் பற்றாக்குறை என்ற தவறான எண்ணம் உருவாகும்.

இதனால் ஏற்படும் பீதியை தடுத்து நிலைமையை சீர் செய்ய இந்த முடிவும் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )