ஐசிசி சம்பியன் கிரிக்கெட் தொடர் – பாகிஸ்தானில் பலத்த பாதுகாப்பு

ஐசிசி சம்பியன் கிரிக்கெட் தொடர் – பாகிஸ்தானில் பலத்த பாதுகாப்பு

ஐசிசி சம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடரை முன்னிட்டு பாகிஸ்தானில் 29 ஆண்டுகளுக்குப் பின்னர் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக பாகிஸ்தானில் நாளை சர்வதேச கிரிக்கெட் பேரவையின் போட்டி தொடங்குகின்றது. இதன் காரணமாக பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஐசிசி சம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை 19ஆம் திகதி முதல் மார்ச் ஒன்பதாம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இதில் இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெறுகின்றன.

ஏனைய அணிகள் விளையாடும் போட்டிகள் லாகூர், கராச்சி மற்றும் ராவல்பிண்டியில் நடைபெற உள்ளன.

2009 ஆம் ஆண்டு லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி பயணித்த பேருந்து மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு, எந்த சர்வதேச அணியும் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்ய விரும்பவில்லை.

எவ்வாறாயினும், 2019 ஆம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது.

பாகிஸ்தானில் கிரிக்கெட்டை தொடர்ந்து பாதிக்கும் ஒரு முக்கிய காரணியாக பாதுகாப்பு இருப்பதால், நாளை தொடங்கும் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு கடுமையான பாதுகாப்பை வழங்க அந்நாட்டு அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.

இதன்படி, பாதுகாப்பு பணிகளில் 13,000க்கும் அதிகமான பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல்கள் மற்றும் மைதானங்களிலும், அணிகள் செல்லும் பாதையிலும் சிறப்பு பாதுகாப்பு திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

போட்டிகள் நடைபெறும் அனைத்து நகரங்களிலும் உயர் பாதுகாப்பு கேமரா அமைப்புடன் பொருத்தவும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share This