வவுனியாவில் தோல்வியடைந்த ஹர்த்தால் – பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறப்பு

வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் இன்று ஹர்த்தால் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் வவுனியாவில் பொதுமக்களின் செயற்பாடுகள் இயல்புநிலையில் உள்ளதுடன் சில செயற்பாடுகள் மட்டுமே ஸ்தம்பிதமடைந்திருந்ததை அவதானிக்க முடிகின்றது.
வடக்கு கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ பிரச்சன்னம் மற்றும் முல்லைத்தீவு முத்தையன்கட்டில் இடம்பெற்ற சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் திங்கட்கிழமை காலை ஹர்த்தால் ஒன்றை மேற்கொள்வதற்கு இலங்கை தமிழரசுகட்சியின் செயலாளர் எம்.எ.சுமந்திரனால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்றையதினம் காலை முதல் வவுனியாவில் பொதுமக்கள் இயல்பு வாழ்கையில் ஈடுபட்டுள்ளமையினை அவதானிக்க முடிகின்றது.
நகரத்தில் அநேக வர்த்தகநிலையங்கள் திறக்கப்பட்டிருந்ததுடன், சில பூட்டப்பட்டும் இருந்தன.
பாடசாலைகளில் கல்விசெயற்பாடுகள் வழமைபோல இடம்பெற்றுவருவதுடன் மாணவர்களின் வரவு குறைந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. வங்கிகள் ஏனைய நிறுவனங்களின் செயற்பாடுகள் வழமைபோல உள்ளது.
இதேவேளை ஹர்த்தால் போராட்டத்திற்கு வவுனியா உள்ளூர் விளைபொருள் உற்பத்தியாளர் சங்கம் தனது முழுமையான ஆதரவினை வழங்கியுள்ளதுடன், அவர்களது மொத்த வியாபார சந்தைக்கடைத்தொகுதி முழுமையாக மூடப்பட்டிருந்தது.
இதேவேளை பழையபேருந்து நிலையம் மற்றும் பசார் வீதியில் உள்ள இஸ்லாமிய வியாபாரநிலையங்களில் குறிபிட்ட அளவிலான வர்த்தக நிலையங்கள் மட்டும் திறந்திருந்த மையை அவதானிக்க கூடியதாக இருந்தது.
இதேவேளை புறநகரப்பகுதிகளான குருமன்காடு, செட்டிகுளம், நெடுங்கேணி, கனகராயன்குளம், புளியங்குளம் பகுதிகளில் அனேகமான வர்த்தகநிலையங்கள் திறந்திருந்ததுடன், சிலவர்த்தக நிலையங்கள் ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்து பூட்டி இருந்தமையினை அவதானிக்க முடிந்தது.
போக்குவரத்து சேவைகள் வழமைபோல் இயங்கியிருந்தது.