இஸ்லாமிய சமூகத்தின், கலாசாரப் பாரம்பரியங்களை எதிர்காலச் சந்ததியினருக்கு வழங்கும் ஒரு தனித்துவமான பெருநாள் ஹஜ்

இஸ்லாமிய சமூகத்தின், கலாசாரப் பாரம்பரியங்களை எதிர்காலச் சந்ததியினருக்கு வழங்கும் ஒரு தனித்துவமான பெருநாள் ஹஜ்

மானிட ஐக்கியத்தையும் சமூக நல்லிணக்கத்தின் மேன்மையையும் ஹஜ் பெருநாள் பறைசாற்றுகிறது என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தனது ஹஜ் பெருநாள் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இஸ்லாமிய சமூகம், தமது கலாசாரப் பாரம்பரியங்களை எதிர்காலச் சந்ததியினருக்கு வழங்கும் ஒரு தனித்துவமான பெருநாள் இதுவாகும்.

பல யுகங்கள் கடந்த பின்னரும் கூட மனிதர்கள் தாம் பின்பற்றும் சமயத்தின் தனித்துவமான வணக்க வழிபாட்டு முறைகளைப் பாதுகாக்க ஒற்றுமையோடு தம்மை அர்ப்பணித்துள்ளனர்.

அனைத்து சமயத் தலைவர்களும் மனித சமூகத்தின் நல்வாழ்வுக்குத் தேவையான உலகப் பொது நன்நெறிகளை எமக்கு வகுத்து தந்துள்ளனர்.

இஸ்லாத்தின் இறுதித் தூதராகக் கருதப்படும் முஹம்மத் நபியவர்களின் வாழ்வியலைப் பின்பற்றும் அனைத்து இஸ்லாமியர்களும் எதிர்பார்க்கும் ஈருலக வெற்றியையும் இறை நெருக்கத்தையும் அடைய, இந்த ஹஜ் பண்டிகைக் வழிவகுக்கும்.

சமூக விழுமியங்களை வலுப்படுத்துவதற்கும் சகவாழ்வைக் கட்டியெழுப்புவதற்கும், சமய போதகர்களின் பங்களிப்பு மகத்தானதாகும். இது, உலகின் தொடர்ச்சியான நல் இருப்புக்கு இன்றியமையாத காரணியாகும்.

புனித அல் குர்ஆனையும் முஹம்மத் நபியவர்களின் வாழ்க்கைத் தத்துவத்தையும் பின்பற்றும் இஸ்லாமியர்கள் அனைவருக்கும், இந்த ஹஜ் பெருநாள், இறை நெருக்கத்தையும் ஆன்மீக உயர்ச்சியையும் பெற்றுத்தரும் உன்னதத் திருநாளாக அமைய எனது வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

Share This