
காலி மாநகர சபை சம்பவம்: பெண் உறுப்பினர் உட்பட 5 பேர் கைது
காலி மாநகர சபையின் விசேட கூட்டத்தின் போது அமைதியற்ற முறையில் நடந்து கொண்டு, மாநகர சபை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நீர் தாக்குதல் நடத்தி, குற்றவியல் பலாத்காரத்தைப் பிரயோகித்து அரச கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் எதிர்க்கட்சி பெண் உறுப்பினர் ஒருவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் காலி மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு உறுப்பினர்கள், பொதுஜன ஐக்கிய முன்னணியின் பெண் உறுப்பினர் ஒருவர் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு உறுப்பினர்கள் அடங்குகின்றனர்.
இவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர், சந்தேகநபர்களை இன்று (31) காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேற்று மாநகர மேயர் சபையை ஆரம்பித்தவுடன், சபை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டதால் சபையில் அமைதியற்ற நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
