
இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலில் நான்கு இலங்கையர்கள் காயம்
இஸ்ரேலின் டிமோனா நகர் மீது ஈரான் மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதல்களில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாக அங்குள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
குறித்த தாக்குதல் காட்சிகளைத் தமது கையடக்கத்தொலைபேசிகளில் பதிவு செய்ய முயன்ற போதே இவர்கள் காயமடைந்துள்ளதாகத் தூதரகம் அறிவித்துள்ளது.
ஈரான் அணுசக்தி மையத்தின் மீதான தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்ரேலின் அணுசக்தி மையம் அமைந்துள்ள டிமோனா (Dimona) நகர் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டது .
அணுசக்தி அனர்த்தங்களைத் தவிர்க்க அவதானத்துடன் செயற்படுமாறு ஐக்கிய நாடுகளின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
தெற்கு இஸ்ரேலிலுள்ள டிமோனா நகரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குறித்த ஏவுகணைத் தாக்குதலில் 47 பேர் காயமடைந்தனர்.
இந்த ஏவுகணை, இஸ்ரேலிய அணுசக்தி மையத்திலிருந்து சுமார் 13 கிலோமீற்றர் தொலைவில் வீழ்ந்து வெடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
