முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு பிணை

கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.
கையூட்டல் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களைக் கருத்தில் கொண்ட பின்னரே, கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இது தொடர்பான உத்தரவைப் பிறப்பித்தார்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபை, சுற்றுலா மேம்பாட்டு பணியகம், இலங்கை விருந்தகங்கள் முகாமைத்துவ நிறுவனம் மற்றும் இலங்கை மாநாட்டுப் பணியகம் ஆகிய நான்கு நிறுவனங்களின் ஊழியர்களுக்கான நேரடி மருத்துவக் காப்பீட்டிற்கு, சட்டவிரோதமான முறையில் ஒரு தரகு நிறுவனத்தை பிரசன்ன ரணதுங்க நியமித்து, அந்தத் தரகு நிறுவனம் மூலம், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திடமிருந்து ரூபா சுமார் 47.5 இலட்சம் ரூபாயை தரகாக பெற்றதாக கூறப்படுகிறது.
இந்தச் செயலால், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்துக்கு இழப்பை ஏற்படுத்தியதாக அவர் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளுக்கமைய, வாக்குமூலம் வழங்குவதற்கு முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் கைதுசெய்யப்பட்டார்.
