“மனித புதைகுழி அகழ்வில் உரிய நியமங்களை பின்பற்றுங்கள்” யாழிலும் நாடாளுமன்றத்திலும் வலியுறுத்தல்

போராட்டத்திற்கு முதல்நாள், அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் எவ்வித பாதுகாப்பு நடவடிக்கைகளும் இல்லாததால் ஆதாரங்கள் அழிக்கப்படும் அபாயம் இருப்பதாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.
நேற்றைய தினம் (ஜூன் 5) செம்மணியில் உள்ள சித்துபாத்தி மயான மனிதப் புதைகுழியின் முன் போராட்டத்தை நடத்திய வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் (ARED), சர்வதேச மேற்பார்வை மற்றும் சர்வதேச தரநிர்ணயங்களுக்கு அமைய மனிதப் புதைகுழியின் அகழ்வினை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியது.
“இது ஒரு தனியான சம்பவமல்ல. இது குறித்த விசாரணைகள் மற்றும் அகழ்வுகள் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் பற்றிய முழு உண்மையையும் வெளிக்கொணர உதவும்” வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சனி மற்றும் செயலாளர் டி.செல்வராணி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
மே 15, ஆரம்பமான அகழ்வில், இதுவரை குறைந்தது 18 பேரின் எலும்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன, மேலும் ஐந்து எலும்புக்கூடுகள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன.
சமூக புதைகுழியின் பாதுகாப்பற்ற நிலைமை ஜூன் 4 அன்று நாடாளுமன்றத்தில் நீதி அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அகழ்வுப் பணிகளுக்கு போதுமான நிதி ஒதுக்கப்படாததால், அகழ்வுப் பணிகள் விரைவில் நிறுத்தப்படும் அபாயம் இருப்பதாக சுட்டிக்காட்டியிருந்தார்.
“விசாரணைக்காக சட்ட வைத்திய அதிகாரிக்கு தற்போது ஒதுக்கப்பட்ட பணம் உண்மையில் இருபது நாட்களுக்குக் கூட போதாது. எனவே, பணிகள் ஒத்திவைக்கப்பட்ட பின்னர் நிதி நிறைவடைந்தால், அவர்கள் பணியை நிறுத்தப் போகிறார்கள்.”

நீதிமன்றத்தால் வெளிப்படுத்தப்பட்ட நூற்றுக்கணக்கான உடல்கள் புதைக்கப்பட்ட ஒரு சமூக புதைகுழியின் முக்கியத்துவத்தை நீதி அமைச்சரிடம் விளக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அந்த புதைகுழியில் அகழ்வுப் பணிகளுக்கு நிதி வழங்க நீதி அமைச்சர் தலையிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
“1996ஆம் ஆண்டு, அந்தப் பகுதி ஒரு பெரிய புதைகுழியாக அறிவிக்கப்பட்டிருந்தது. என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள் என நம்புகின்றேன். ஏனெனில், கிருஷாந்தி குமாரசாமி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் அந்தப் பகுதியில் 600ற்கும் மேற்பட்ட உடல்கள் புதைக்கப்பட்டதாகக் கூறினார். உண்மையை வெளிக்கொணர்வதில் இது மிகவும் முக்கியமானது என நான் நினைக்கிறேன். எனவே, இதில் தலையிட்டு பொருத்தமான நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நிதி வழங்குவதோடு மாத்திரமல்லாமல் சமூக புதைகுழியில் உள்ள ஆதாரங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதும் அவசியம் என, தமிழ் மக்கள் பிரதிநிதி நாடாளுமன்றத்தில் மேலும் வலியுறுத்தினார்.
“அதனை ஒரு சமூக புதைகுழியாக அறிவிக்குமாறு நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன், அது ஒரு சமூக புதைகுழியாக மாறக்கூடிய இடம், பின்னர், இந்த வேலையை சரியாக செய்ய, நீங்கள் விரும்பினால், வெளியில் இருந்து நிதியுதவியை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் அதனை செய்ய வேண்டும். ஏனெனில், நான் இதை மிகுந்த பொறுப்புடன் சொல்கிறேன். ”
செம்மணி புதைகுழி விசாரணைகள் தடையின்றி தொடர்வதை உறுதி செய்வதற்காக தலையிட வேண்டும் என்ற தமிழ் மக்கள் பிரதிநிதியின் கோரிக்கையை நிறைவேற்ற உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நாடாளுமன்றத்தில் உறுதியளித்தார்.

“ஆம், உங்கள் விடயத்தை நான் நன்கு கவனத்தில் கொள்வேன். நான் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பேன்.
இந்த விடயத்தை நான் உடனடியாக விசாரிக்கின்றேன். இந்தப் பணிக்காக அமைச்சு சிறிது பணம் ஒதுக்கியிருப்பதை நான் அறிவேன். அது போதாது என்றால், என்ன செய்ய முடியும் என்பதைப் பார்ப்போம். ஆனால், நீங்கள் சொல்வதன் முக்கியத்துவத்தை நான் புரிந்துகொள்கிறேன். நான் அதன்படி செயல்படுவேன். மேலும், சில நாட்களில் நல்ல பதிலை வழங்க நான் எதிர்ப்பார்க்கின்றேன்.”
செம்மணியில் உள்ள சித்துபாத்தி புதைகுழியில் தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் தலைமையில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஜூன் 2 முதல் நடைபெற்று வருகின்றன.