கிழக்கு கடலில் கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில் மீனவர் படுகாயம், அரசு விசாரணை

கிழக்கு மாகாண மீனவர்கள், இளம் மீனவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய கடற்படை மீது உடனடியாக சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி போராட்டம் நடத்தியதை அடுத்து, அரசாங்கம் விசாரணை நடத்த தீர்மானித்துள்ளது.
நேற்று (ஜூன் 3) மாலை கடலில் ரோந்து நடவடிக்கையை தடுத்த மீனவர்கள் குழுவுடன் ஏற்பட்ட மோதலில் கடற்படை உறுப்பினர் ஒருவரின் துப்பாக்கி இயங்கியதில் 23 வயது மீனவர் காயமடைந்ததாக கடற்படை கூறுகிறது.
பலத்த காயமடைந்த ஐயூப்கான் இனோஸ் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
குச்சவெளி கடலில் நிலத்திலிருந்து ஏழு கிலோமீற்றருக்கு அப்பால் கடலில் மீனவர்கள் சுருக்கு வலையை பயன்படுத்த அனுமதிக்கப்படுவதாகவும் எனினும் ஜூன் 3 ஆம் திகதி, மீனவர்கள் குழு ஒன்று கரையிலிருந்து பார்க்கக்கூடிய தூரத்தில் சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற கடற்படையினர் எதிர்ப்பு தெரிவித்தபோது, மீனவர்களுக்கும் கடற்படை வீரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, மேலும் ஒரு கடற்படை வீரர் ஒரு மீனவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அவர்கள் மேலும் கூறுகின்றனர்.
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோது கைப்பற்றப்பட்ட ஒரு படகை ‘கடத்த’ வந்த ஒரு குழுவுடன் ஏற்பட்ட மோதலில் இளைஞர் காயமடைந்ததாக கொழும்பில் உள்ள ஊடகங்கள் கடற்படையை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளன.
“அந்தக் குழு ஆத்திரமூட்டும் வகையில் நடந்து கொண்டது, கடற்படையினரின் துப்பாக்கிகளில் ஒன்று வெடித்து ஒரு நபரைத் தாக்கியது,” என பெயர் குறிப்பிட விரும்பாத கடற்படை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (ஜூன் 4) காலை குச்சவெளி நகரில் நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து விசாரணை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து கூடியவிரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கடற்படையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
போரால் பாதிக்கப்பட்ட வடக்கில் ஒரு மீனவர் சங்கத்தின் தலைவரைத் தாக்கி சித்திரவதை செய்ததாக இலங்கை கடற்படை மே மாதம் குற்றம் சாட்டப்பட்டது.
கிளிநொச்சி, சுண்டிக்குளத்தைச் சேர்ந்த கல்லாறு மீனவர் சங்கத் தலைவர் அன்டன் ரொபின், மே 20 அன்று சிவில் உடையில் இருந்த கடற்படை குழுவால் கொடூரமாகத் தாக்கப்பட்ட பின்னர், தன்னைக் கொலை செய்ய முயற்சி நடந்ததாகக் கூறி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார்.
“அவர்கள் என்னை சுமார் 100 மீற்றர் காட்டுக்குள் அழைத்துச் சென்று கொலை செய்ய முயன்றனர். அவர்கள் ஒரு பெரிய கல்லை எடுத்து என் பிட்டத்தில் போட்டனர்,”
இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு
வடக்கு கடலில் சட்டவிரோதமாக மீன்பிடிக்க வந்த இரண்டு இந்திய மீனவர்களை சுட்டுக் காயப்படுத்தியதாக இலங்கை கடற்படை மீது இந்த ஆண்டின் ஆரம்பத்திர் குற்றம் சாட்டப்பட்டது.
ஜனவரி 27, 2025 அன்று இரவு, கடற்படையினரின் கட்டுப்பாட்டில் படகினை கொண்டுவரும் நோக்கில் மீனவப் படகில் ஏறிய கடற்படை அதிகாரி ஒருவரின் துப்பாக்கியை மீனவர்கள் பறிக்க முயன்றபோது அது இயங்கியதால் மீனவர்கள் காயமடைந்ததாக கடற்படை அப்போது அறிவித்திருந்தது.
பாபு மற்றும் செந்தமிழ் ஆகிய இரண்டு இந்திய மீனவர்கள் அன்றைய தினம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில காயங்களுடன் அனுமதிக்கப்பட்டனர்.