வத்தேகம பேருந்து விபத்தில் பதினைந்து பேர் காயம்

கண்டிக்கு குடுகல வழியாக பயணித்த இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பேருந்து, வத்தேகம, அரலிய உயன பகுதிக்கு அருகில், வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் பதினைந்து பயணிகள் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் வத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து நடந்த நேரத்தில், சுமார் 25 பயணிகள் பேருந்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென தனது இருக்கைக்கு அருகில் இருந்த கதவு திறந்ததால், ஓட்டுநர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததாக இலங்கை போக்குவரத்து சபையின் கண்டி மாவட்ட மேலாளர் சனத் பிரசன்ன தெரிவித்தார்.
அவர் பேருந்து கதவை மூட முயன்றபோது, பேருந்தின் கட்டுப்பாட்டை இழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த பயணிகள் சீரான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. வத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.