கொழும்பு புறநகரில் போலி பொலிஸ் அதிகாரி – பல பெண்கள் துஷ்பிரயோகம்

கொழும்பு புறநகரில் போலி பொலிஸ் அதிகாரி – பல பெண்கள் துஷ்பிரயோகம்

கொழும்பின் கல்கிஸ்ஸ பகுதியில், பொலிஸ் அதிகாரி என நாடகமாடி பெண்களை இலக்காக்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரி என தன்னை காட்டிக்கொண்ட இந்த நபர், வீதியில் செல்லும் இளம் பெண்களை “பரிசோதனை செய்ய வேண்டும்” என்று கூறி பாழடைந்த இடங்களுக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று, அங்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், கடந்த பிப்ரவரி மாதம் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் விளைவாக, சந்தேக நபர் கடந்த 20 ஆம் திகதி கல்கிஸ்ஸ சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அத்திடிய பகுதியில் காருடன் கைது செய்யப்பட்ட இந்நபர், மஹியங்கனையைச் சேர்ந்த 47 வயதுடையவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பொலிஸார் தெரிவிக்கையில், இவர் கல்கிஸ்ஸ பகுதியில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளார் என்பதுடன், கடந்த காலங்களிலும் இதுபோன்ற துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறார். கடந்த மாதங்களில் அந்தப் பகுதியில் நிகழ்ந்த சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு, புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டதாகவும், சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பொறுப்பதிகாரி ரஷினி ராஜபக்ஷவின் மேற்பார்வையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுவரை பல பெண்கள் இந்த போலி அதிகாரியால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக தகவல் தெரிவிக்க பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களது உறவினர்கள் முன்வர கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள், குறிப்பாக பெண்கள், அடையாளம் தெரியாத நபர்கள் அல்லது அங்கீகரிக்கப்படாத அதிகாரிகள் என கூறிக்கொள்ளும் யாரும் தங்கள் வாகனங்களில் ஏற வேண்டாம் எனவும், சந்தேகத்திற்குரிய நடத்தை கவனிக்கப்பட்டால் உடனடியாக பொலிஸைத் தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )