புலிகள் கூட அலுவலகங்களுக்குள் புகுந்து தமது எதிரிகளை கொலை செய்யவில்லை

புலிகள் கூட அலுவலகங்களுக்குள் புகுந்து தமது எதிரிகளை கொலை செய்யவில்லை

“போர்க் காலத்தில் புலிகள் கூட அலுவலகங்களுக்குள் புகுந்து தமது எதிரிகளை கொலை செய்யவில்லை. போர்க் காலத்தை விடவும் தற்போது பயங்கரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது, “வெலிகம துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமானது படு பயங்கரமாகும். தமக்கு பாதுகாப்பு வேண்டும் என்று துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த தவிசாளர் லசந்த விக்கிரமசேகர கோரிக்கை விடுத்திருந்த போதிலும் அது வழங்கப்படாத சூழ்நிலையிலேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

நாட்டில் 30 வருட காலம் போர் நிலவியது. இந்தக் காலப் பகுதியில் புலிகள்கூட இவ்வாறு அச்சமின்றி அலுவலகங்களுக்குள் புகுந்து தமது எதிரிகளை கொல்லவில்லை. ஆனால், ஜே.வி.பி. ஆட்சியின் கீழ் அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளது. இது ஜனநாயகத்திற்குப் பாரிய அச்சுறுத்தலாகும்.

நாட்டை அராஜக நிலைக்குக் கொண்டு செல்வதற்காக பாதாளக் குழு என்ற போர்வையில் தமக்கு தேவையானவற்றை நிறைவேற்றிக் கொள்வதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

மக்கள் நாய், பூனைகள்போல சுட்டுக்கொல்லப்படுவதை அனுமதிக்க முடியாது. பாதாளக் குழுக்களை ஒடுக்குகின்றோம் என்ற போர்வையில் அக்குழுக்கள் பலப்படுத்தப்படுகின்றனவா என்ற சந்தேகமும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது” என்றார்.

Share This