உக்ரைன் பாதுகாப்புக்கான பொறுப்பை இனி ஐரோப்பிய நாடுகள் தான் சுமக்க வேண்டும்: ஜே.டி.வான்ஸ்

உக்ரைன் பாதுகாப்புக்கான பொறுப்பை இனி ஐரோப்பிய நாடுகள் தான் சுமக்க வேண்டும்: ஜே.டி.வான்ஸ்

உக்ரைன் பாதுகாப்புக்கான பொறுப்பை இனி ஐரோப்பிய நாடுகள் தான் சுமக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் – ரஷ்யா இடையே மூன்றரை ஆண்டு காலமாக நடைபெறும் போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் முயன்று வருகிறார். இதன் நிமித்தமாக அவர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின், உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி ஆகிய இருவரையும் தனித்தனியாக அழைத்துப் பேசியுள்ளார். இந்நிலையில், உக்ரைன் பாதுகாப்புக்கான பொறுப்பை இனி ஐரோப்பிய நாடுகள் தான் சுமக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிடமிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சார்ந்துள்ளது உக்ரைன். மூன்றரை ஆண்டுகளாக போர் நீடிக்கும் நிலையில், இனி உக்ரைனுக்கு வான்வழி பாதுகாப்பில் மட்டுமே உதவி என்று ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

கீவ் (உக்ரைன் தலைநகர்) பாதுகாப்புக்காக இனியும் அமெரிக்கா ‘பிளாங் செக்’ எழுதிக் கொண்டிருக்காது என்று தெரிவித்துவிட்டார். இனி ஐரோப்பிய கூட்டாளிகள் தான் உக்ரைன் பாதுகாப்புக்கான சுமைகளை பெருமளவில் சுமக்க வேண்டும் என்ற முடிவுக்கும் ட்ரம்ப் வந்துவிட்டார் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளும் ஒரு கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. அதில், உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்ய விரும்பும் நாடுகள் இணையலாம் என்று தெரிவித்துள்ளது.

இந்தச் சூழலில் புதன்கிழமை ஃபாக்ஸ் நியூஸ் செய்தி சேனலுக்குப் பேட்டியளித்த அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ், “போரின் சுமையை முழுக்கமுழுக்க நாங்களே சுமக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன். இதில் ஐரோப்பா தான் பிரதானமான பங்குதாரராக இருக்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி ட்ரம்ப் தெளிவாக இருக்கிறார். இனி என்ன நடந்தாலும் ஐரோப்பிய நாடுகள் தான் உக்ரைன் பாதுகாப்பில் பெரும் பங்கை சுமக்க வேண்டும். உக்ரைன் ஐரோப்பிய கண்டத்தில்தான் உள்ளது. எனவே அது அவர்களின் பாதுகாப்பும் சார்ந்தது.” என்றார்.

ரஷ்யா, போரில் இதுவரை தான் ஆக்கிரமித்த உக்ரைனின் பகுதிகளையும், இன்னும் சில பகுதிகளையும் தனதாக்கிக் கொள்ள குறிவைக்கிறது. இதுவரை உக்ரைனின் 5-ல் ஒரு பகுதி ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், “போர் நிறுத்த உடன்படிக்கை ஏதும் எட்டப்படுவதற்கு முன்னர் நில உரிமைகள் தொடர்பான உடன்பாடு எட்டப்பட வேண்டும்.” என்று ட்ரம்ப் கூறுகிறார்.

ஆனால், உக்ரைனோ “எங்கள் நிலத்தின் ஒரு அங்குலத்தையும் விட்டுத்தருவதற்கு இல்லை எனக் கூறுகிறது. ஆனால், ரஷ்யப் படைகளை சமாளிக்கும் அளவுக்கு உக்ரைனிடம் இப்போது படை பலம் இல்லை. அதேபோல் ராஜாங்க ரீதியாக ஏதேனும் உடன்பாட்டை எட்டி ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை குறுகிய காலத்தில் மீட்பதற்கான சாத்தியக் கூறுகளும் இல்லை.” எனக் கூறுகிறது.

 

Share This