கிராம, சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் பெருந்தோட்டங்களில் கடமையை செய்கின்றார்களா?

கிராம, சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் பெருந்தோட்டங்களில் கடமையை செய்கின்றார்களா?

பெருந்தோட்ட பகுதிகளுக்கு கிராம உத்தியோகஸ்தர்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் சரியான முறையில் கள விஜயம் மேற்கொண்டு கடமையாற்றுகின்றார்களா? அவர்கள் தங்கள் கடைமைகளுக்காக எத்தனை முறை வருகை தந்துள்ளார்கள்? என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் கேள்வியெழுப்பினார்.

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களை மாத்திரம் வீடமைப்புத் திட்டத்தில் உள்வாங்காமல் வெளியிடங்களில் தொழில் புரிந்து குறித்த தோட்டத்தில் வசிக்கும் அனைவருக்கும் வீடுகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அத்துடன், மலையக மக்கள் வாழும் மாவட்டங்களில் எல்லை நிர்ணயம் செய்யும்போது பெருந்தோட்ட மக்கள் வாழும் பிரதேசங்கள் சரியான முறையில் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் தோட்டபுற வைத்தியசாலைகள் அரசாங்க வைத்தியசாலைகளாக தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதுடன், தோட்ட சிறுவர் பாராமரிப்பு நிலையங்களின் உட்கட்டமைப்பு வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒரு திருடர் மற்றும் பிச்சைக்காரன் என்று குறிப்பிட்டத்தையும் கண்டித்திருந்தார்.

“தேசத்தைக் காப்பாற்றிய ஒருவரை திருடன் மற்றும் பிச்சைக்காரன் என்று அழைப்பது பகுத்தறிவற்றது.  நீதி அமைச்சர் தமது கூற்றை மீளப்பெற வேண்டும் என்பதுடன் மன்னிப்புக் கோர வேண்டும்.” எனவும் ஜீவன் தொண்டமான், கூறினார்.

Share This