
திமுக கூட்டணியில் தேமுதிக – வெளியானது அறிவிப்பு
கடந்த 2016-ஆம் ஆண்டு தேர்தலின் போதே, திமுக கூட்டணியில் தேமுதிக இணையும் என்று உறுதியாக நம்பிய முன்னாள் முதல்வர் கருணாநிதி பழம் நழுவி பாலில் விழும் என்று கூறியிருந்தார்.
அவர் அவ்வாறு கூறி 10 ஆண்டுகளுக்குப் பின் திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலினை சந்தித்துப் பேசினார் தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா. இந்த சந்திப்பின்போது திமுக கூட்டணியில் தேமுதிக இணைவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும், எம்.பி. பதவி வழங்கப்படுமா என்ற கேள்விக்கு அண்ணன் ஸ்டாலின் இது குறித்து அறிவிப்பார் என்றும் பிரேமலதா கூறியிருந்தார்.
தமிழகத்தின் வட மாவட்டங்களில் தேமுதிகவுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்படலாம் என்றும், தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷூடன் ஸ்டாலின் மருமகன் சபரீசனும், அமைச்சர் எ.வ. வேலுவும் பேச்சுவார்த்தை நடத்தி, தேமுதிகவை திமுக கூட்டணிக்குள் கொண்டு வந்திருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை அதிமுக கூட்டணியில் போட்டியிட்டுவந்த தேமுதிக, முதல் முறையாக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. தேமுதிகவுக்கு ஒரு எம்.பி. பதவியும், 7 பேரவைத் தொகுதிகளும் ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
கடந்த 2005ஆம் ஆண்டு தேமுதிக கட்சியைத் தொடங்கிய விஜயகாந்த், 2006-ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 8 சதவீத வாக்குகளை பெற்றிருந்தார்.
பிறகு, 2011-ஆம் ஆண்டு அதிமுகவின் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றார்.
பிறகு, 2016 தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு ஒரு இடங்களில் கூட வெற்றி பெறாமல் போனது தேமுதிக. 2021ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டிருந்தது. கடந்த 2024 மக்களவைத் தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் இருந்து வந்த தேமுதிக, தற்போது 2026ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் முதல் முறையாக, திமுக கூட்டணியில் இணைந்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் தேமுதிகவை இணைக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. அதாவது, 2016ஆம் ஆண்டு திமுகவுடன் தேமுதிக இணையுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, திமுக தலைவராக இருந்த கருணாநிதி, பழம் நழுவி பாலில் விழும் என்று பதிலளித்திருந்தார்.
ஆனால், திமுகவுடன் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டி என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்தபோது, அது பேசுபொருளாகியிருந்தது.
பிறகும் கூட, திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து தோல்வி அடைந்து, தள்ளிப்போய்க்கொண்டே இருந்த நிலையில்தான். தற்போது 2026ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் கருணாநிதியின் கூற்று உண்மையாகியிருக்கிறது.
